முருங்கைக்காய் சிப்ஸ் – விமர்சனம்

நடிப்பு: ஷாந்தனு, அதுல்யா, பாக்யராஜ், யோகிபாபு, ஊர்வசி, முனிஷ்காந்த், மனோபாலா, மயில்சாமி, மதுமிதா மற்றும் பலர்

இயக்கம்: ஸ்ரீஜர்

தயாரிப்பு: ’லிப்ரா புரொடக்சன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகர்

இசை: தரண்குமார்

ஒளிப்பதிவு: ரமேஷ் சக்கரவர்த்தி

நாயகன் ஷாந்தனுவிற்கும் நாயகி அதுல்யாவிற்கும் திருமணம் முடிந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது ஷாந்தனுவை சந்திக்கும் அவரது தாத்தா பாக்யராஜ் தம் குடும்ப வழக்கம் என ஒன்றைக் கூறுகிறார். அதன்படி ‘முதலிரவானது திருமணத்தன்று நடக்கக் கூடாது. ஆனால், புதுமணத்தம்பதிகள் ஒரே அறையில் இருக்க வேண்டும்.’ இப்படியொரு சிக்கலான டாஸ்க் வழங்கப்படுகிறது. இவ்விஷயம் அதுல்யாவிற்கு தெரியாது. ஷாந்தனு இந்த டாஸ்க்கில் வென்றாரா அல்லது அதுல்யாவின் முதலிரவு ஆசை வென்றதா என்பதே திரைக்கதை.

நாயகன் சாந்தனு துறுதுறு இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார். அதுபோல் அதுல்யா ரவி துள்ளலான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவர்கள் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

முதலிரவை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர். படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. அதுவும், ஒரே அறையில் தான் கதை நகர்கிறது. இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவை அதிகம் எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிந்தது. முதலிரவு குறித்து அட்வைஸ், பழைய படங்களில் வந்த டயலாக் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

தரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. குறிப்பாக ரமேஷ் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவோடு பாடல்களை பார்க்கும்போது மிகவும் கலர்ப்புல்லாக இருக்கிறது. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ரமேஷ் சக்ரவர்த்தி.

’முருங்கைக்காய் சிப்ஸ்’ – சுவை போதாது!