“இதயம் வலிக்கிறது”: ஜெ. மறைவு குறித்து குஷ்பு!

ஜெயலலிதா மறைவு குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கூறியிருப்பது:

அவரின் இழப்பை ஈடு செய்ய வார்த்தைகள் இல்லை. இதயம் வலிக்கிறது. அவரைப் போன்ற துணிச்சல்மிகு தலைவரை இனி பார்க்க முடியாது. எல்லா துயரங்களையும் எதிர்த்து போராடி வெற்றி கண்டீர்கள்.

உங்கள் மீது மக்கள் என்றும் நீங்கா நம்பிக்கை கொள்ளச் செய்யும் திறன் உங்களிடம் இருந்தது. உங்களை போன்ற தலைவர்கள் மறைவதில்லை; நித்திய வாழ்வு காண்பர். அந்த வகையில் நீங்கள் எப்போதுமே எங்களுடன் இருப்பீர்கள் அம்மா.

சூட்டிங் இடைவேளையில் சாலையில் நான் காத்துக் கிடந்திருக்கிறேன்… கோட்டையில் இருந்து அவர் காரில் புறப்பட்டுச் செல்வதைக் காண. ஒவ்வொரு நாளும் அவரைப் பார்த்து நான் கையசைத்ததைக் கவனித்த ஜெயலலிதா, ஒருநாள் இரண்டு காவலர்களை அனுப்பி என்னை அழைத்து வரச் செய்தார். என்னைக் கட்டியணைத்து புன்னகை பூத்தார்.

அதன்பின்னர் என் மகள் பிறந்தபோது போயஸ் கார்டனுக்குச் சென்றேன். அவர் இதயத்திலிருந்து ஒரு புன்னகையை உதிர்த்தார். அந்த வெற்றிடம் எப்போதும் நிரப்பப்படாமல் இருக்கும். நீங்கள் மீண்டும் இரட்டை விரல் காட்டி கைகளை அசைப்பதை காண முடியுமா?