மோடி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு தொடர்ந்தது!

காவிரி விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் மார்ச் 29ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை நடத்த வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அமைச்சரவை செயலாளர் பி.கே சின்கா மற்றும் நீர்வள ஆதாரத் துறை செயலாளர் யு.பி சிங் ஆகியோர், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் செயல்பாட்டு திட்டத்தை அமல்படுத்தவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.