முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி: திமுகவினர் உற்சாகம்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்து, முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார்.

கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, கருணா நிதியின் மகள் செல்வி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முரசொலி பவள விழா கண்காட்சியைப் பார்வையிட்ட பின், கருணாநிதி முரசொலி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கவலை அளிக்கக் கூடிய வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், ஓராண்டுக்குப் பிறகு அவர் பொதுவெளியில் வருகை புரிந்திருப்பது திமுகவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.