கல்தா – விமர்சனம்

தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கிராமத்தில் பணத்திற்காக அரசியல்வாதிகள் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொட்டி குவிக்கிறார்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சிவா நிஷாந்தின் அப்பா கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த கழிவு பொருட்களின் பாதிப்பால் ஆண்டனியின் மனைவி உட்பட ஊரில் பலர் இறக்கிறார்கள். இதனால் கோபமடையும் ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி ஊர் கவுன்சிலரிடம் சண்டை போடுகிறார். கவுன்சிலரோ ஆண்டனியை கொலை செய்து விடுகிறார்.

இறுதியில் ஊர் மக்கள் இதை எதிர்த்து போராடினார்களா? கவுன்சிலர் என்ன ஆனார்? மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவா நிஷாந்த் அறிமுக நடிகர் என்று தெரியாதளவிற்கு நடனம், சண்டைக்காட்சிகளில் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ஐரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

0a1a

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்த ஆண்டனி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் கஜராஜ்.

கழிவுகள் கொட்டப்படுவதால் கிராமங்கள் எப்படி பாதிக்கப்படுகிறது. பணத்திற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள். கழிவுகளால் சுகாதாரம் எப்படி கெடுகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. இவரின் முயற்சிக்கு பெரிய பாராட்டுகள். லாஜிக் மீறல்களும் திரைக்கதையில் கொஞ்சம் கவனமும் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜெய் கிரிஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக அப்பா பாடல் ரசிக்க வைக்கிறது. வாசுவின் ஒளிப்பதிவு கவனிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கல்தா’ அரசியல் பழகு.