ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘லைக்கா’வின் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் இசை வெளியீடு!

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 65-வது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்துகொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.

0a1f

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், ”இப்படத்தின் பாடல்களை உருவாக்குவதற்காக மைசூரில் இசையமைப்பாளர்  கீரவாணியுடன் தங்கினேன். ஒவ்வொரு பாடல் உருவான விதமும் சுவாரஸ்யமாகவும், மறக்க இயலாததாகவும் இருந்தது. அவருடைய அறைக்குச் சென்று கம்போசிங் தொடங்கலாமா என கேட்டபோது, முதலில் என்னுடன் செஸ் விளையாடுங்கள் என்றார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவருடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதன்பிறகு பாடல்களை குறுகியகால அவகாசத்தில் உருவாக்கினார். அவருடைய மெல்லிசைப் பாடல்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகன்.

அவர் என்னிடமும், இயக்குநர் வாசு சாரிடமும் ஒரு  விசயத்தை தெளிவுபடுத்தினார். சந்திரமுகி 2 படத்தின் தமிழ் பதிப்பிற்கு சைதன்ய பிரசாத்தும், தெலுங்கு பதிப்பிற்கு மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதட்டும் என்றார். தெலுங்கு பதிப்பிற்கான தமிழ் பாடல்களை நான் எழுதினேன். தமிழ் பதிப்பிற்கான தெலுங்கு பாடல்களை சைதன்ய பிரசாத் எழுதினார். இது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. பாடலாசிரியர் சைதன்ய பிரசாத்துடன் இணைந்து நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.

இயக்குநர் பி. வாசுவை மனதார பாராட்டுகிறேன். ஏனெனில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் வடிவேலுவைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக கதையையும், திரைக்கதையும் அமைத்து சந்திரமுகி 2-வை உருவாக்கி இருக்கிறார்.

கதையோட்டத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் வெளியாவதில்லை என ஏராளமானவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் எனக்கு அமைந்த ஒவ்வொரு பாடல்களும் அருமையான மெலோடி . அழகான சூழல். ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். அனைத்துப் பாடல்களும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், ” சந்தோஷமாக உணர்கிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுக்கும், மாஸ்டர் ராகவா லாரன்சுக்கும் நன்றி. படப்பிடிப்புத் தளத்தில் வடிவேலு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.  ராகவா லாரன்ஸை புகழ்ந்து பேசுவது அவருக்கு பிடிக்காது. இருந்தாலும் சிலவற்றை சொல்ல வேண்டும். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘சர்வீஸ் இஸ் காட்’. சர்வீஸ் செய்பவர்கள் இறைவன் தானே..! நான் நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஹீரோ.. கடவுள்.. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் சார் தான். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார்.

நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் பேசுகையில்,” சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை. நிறைய நேர்காணல்களில் உங்களின் கனவு கதாபாத்திரம் என்ன என கேட்கும்போது, சந்திரமுகியாக நடிக்க வேண்டும் என என் விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன். மனதில் எதைப் பற்றி உண்மையாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அது ஒரு காலத்தில் நடந்துவிடும் என்பார்கள். அதனால் தான் நான் இந்த மேடையில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

திரையுலகில் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவர்கள் குறைவு. தட்டிப் பறிப்பவர்கள் தான் அதிகம். உற்சாகப்படுத்துபவர்களில், மிகவும் குறைவானவர்களில் மாஸ்டர் ராகவா லாரன்சும் ஒருவர். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது ஃபிட்னஸ் குறித்தும், மோட்டிவேஷனல் குறித்தும், கரியர் குறித்தும், நடனம் குறித்தும், ஏராளமான பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகாம்மாவுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம்.

வடிவேலுவை சினிமாவில் பார்த்திருக்கிறேன். டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களுடைய காமெடியை நேரடியாக உடனிருந்து பார்க்கும்போது கிடைத்த மகிழ்ச்சியான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

அனைவருடனும் இணைந்து பணியாற்றியது என் கனவு நனவானது போல் உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், ”சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், வரவேற்பும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் பி. வாசு சார் என்னை பார்த்தவுடன், ஓகே நீ பிரியா கதாபாத்திரத்தில் நடி என்றார். அப்போதிலிருந்து ஆறு மாதம் வரை தொடர்ந்த இந்த சந்திரமுகியின் பயணம் என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க இயலாத வகையில் அமைந்தது. இந்த தருணத்தை நான் இப்போதும் கொண்டாடுவேன்.

வடிவேலு சாரை படப்பிடிப்பு தளத்தில் முதன்முதலாக பார்த்தபோது அவரிடம் சென்று நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்றேன். நான் சென்னைக்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டது அவருடைய படங்களை வீடியோவில் பார்த்து தான்” என்றார்.

கலை இயக்குநர் தோட்டா தரணி பேசுகையில், ” நான் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அதனால் இது ஒன்றும் புதிதல்ல. வாசு சாரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவர்தான் இந்த படைப்புக்கு கேப்டன். அவர் சொல்லும் விசயங்களைத் தான் நாங்கள் உருவாக்கித் தருகிறோம். அதை நான் மட்டும் தனித்து செய்வதில்லை. என்னுடைய மகள், என்னுடைய சகோதரர் மற்றும் என் உதவியாளர்கள் என ஏராளமான திறமையானவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் பேசுகையில், ” பி வாசு சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு முன் அவருடைய அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அப்போது உறுதியாக இணைந்து பணியாற்றுவோம் என்றார். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு 20 ஆண்டுகளாகியிருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் வாசுவிற்கு நன்றி.

அவருடன் பணியாற்றும்போது படப்பிடிப்பு தளத்தில் எப்போதாவது ஒருமுறையாவது காட்சிக்காக எழுதப்பட்டிருக்கும் பேப்பரை பார்ப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு முறை கூட பேப்பரை பார்க்கவில்லை. எப்போதாவது ஒரு சந்தேகம் கேட்டால்…. உடனடியாக அது குறித்த விளக்கத்தை விரிவாக சொல்வார். அவர் இப்படத்தின் கதையை எவ்வளவு நாள் எழுதி இருப்பார்… எவ்வளவு நாள் யோசித்திருப்பார்.. என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எப்போது கேட்டாலும் பேப்பரை பார்க்காமல் தன் நினைவில் இருந்து எல்லா விசயத்தையும் துல்லியமாக சொல்வார்.

அதன் பிறகு படத்தின் நாயகனான ராகவா மாஸ்டரை சொல்ல வேண்டும். ஒரு முறை அவரிடம் நாளைக்கு குதிரையேற்றக் காட்சி இருக்கிறது. நினைவிருக்கிறதா? என்றேன். நினைவிருக்கிறது என்றார். ஏதேனும் பயிற்சி எடுத்திருக்கிறீர்களா? என கேட்டேன். ஓரளவிற்கு என சொல்லிவிட்டார். ஆனால் மூன்று கேமராவை வைத்து அந்த காட்சியை படமாக்கும்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். குதிரையேற்ற காட்சியில் நேர்த்தியாக நடித்தார். நடனத்தைப் போல் குதிரையேற்ற சவாரியையும் இயல்பாக கற்றுக்கொண்டு நடித்தவர் மாஸ்டர் ராகவா.  இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அழகாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

‘அழகன்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் கீரவாணியின் ரசிகன் நான். உங்களுடைய பாடலை படமாக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பேசுகையில், ” இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள் தான்.

இந்த திரைப்படத்தை முதல் முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.

சந்திரமுகி படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார் என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்தது. பொதுவாக பின்னணி இசையை ஒரே ஒரு தொழில்நுட்பக் கலைஞரை மட்டும் பிரதானமாக வைத்து பணியாற்றுவோம். ஆனால் இந்த படத்திற்காக ஏழு திறமையான புரோகிராமர்களை வரவழைத்து இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தோம். தரம் குறையாமலும் விரைவாகவும் உருவாக்கி இருக்கும் பின்னணி இசை எப்படி இருக்கிறது என்று ரசிகர்களாகிய நீங்கள் தான் படத்தைப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல்… ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா” என்றார்.

வடிவேலு பேசுகையில், ” ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.

மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன்பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்கப் போற வடிவேலு வேற..

மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆகுது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு.

என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார்.

இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படியே ஆடிப் போய்விட்டேன்.

அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையைக் கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2.

சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.‌

இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் ” என்றார்.

நடிகர் சக்திவேல் பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் பணியாற்றவில்லை. சந்திரமுகியின் ஆட்டத்தையே நம்மால் தாங்க முடியாது. தற்போது அவருடன் காஞ்சனாவும் கூட சேர்ந்திருக்கிறார். சந்திரமுகியும், காஞ்சனாவும் சேர்ந்தால் என்ன ஆகும்..?  இதுதான் இந்தப் படத்தின் மீது எனக்கான மிகப் பெரிய நம்பிக்கை.

அப்பாவிடம் யாராவது சின்ன கோடு போட்டால் அவர் பெரிய ரோடே போடுவார். அப்படி போட்ட ரோடு தான் சந்திரமுகி. இது இரண்டாவது ரோடு. ரெண்டு ரோடுக்கும் இடையில் ஒரு பிரிட்ஜ் இருக்கிறது. அது நம் வடிவேலு அண்ணன். அடுத்த பாகத்திற்கும் அவர்தான் பிரிட்ஜ். சந்திரமுகி படத்தின் முதல் பாகம் எப்படி இயக்குநர் பி. வாசு படமாகவும்.. ரஜினி சார் படமாகவும்.. ஜோ மேடத்தின் படமாகவும்… வடிவேலின் படமாகவும்.. இருந்ததோ, அதேபோல் சந்திரமுகி 2 அப்பாவின் படமாகவும்.. மாஸ்டர் ராகவாவின் படமாகவும்.. கங்கனாவின் படமாகவும்.. அண்ணன் வடிவேலுவின் படமாகவும் இருக்கும்.

தலைவருக்குப் பிறகு தர்மத்தின் தலைவன் என்பது மாஸ்டருக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கும். தர்மத்தின் தலைவன் படத்தை நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும். அதில் உங்கள் தம்பியாக நான் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பி. வாசு பேசுகையில், ” நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக்கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ… என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்… இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்துகொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம்.

இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரை காணும்போது இவர்களுடன் எப்படி போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது.

இந்த மாலை வேளையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம் தான் . இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம் தான் இந்த இசை வெளியீட்டு விழா.

ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார்.

அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை.  ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம். அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின்போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்கள் நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.

ராதிகா என்னுடைய இயக்கத்தில் முதன்முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார். இந்தப் படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு சின்ன கதை இருக்கும். அனைவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

நடிகர் விக்னேஷ், நடிகர் ரவி மரியா போன்றவர்களுக்கு எல்லாம் நான் வாய்ப்பளித்திருக்கிறேன். இப்படத்தின் மூலமாக அவர்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும் அதிகம்.

இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த வேட்டையன் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். வேட்டையன் என்றால் வேட்டையன் மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

மாஸ்டர்,  ராஜா வேஷம் போட்டு நடிக்கும்போது அவர் பேசும் தமிழ் எப்படி இருக்கும்? என்பது எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவர் ஜாலியாக.. ஸ்லாங்குடன் தமிழ் பேசுவார்.  “அவளை பார்த்ததற்கே… அவள் மீது உனக்கு ஆசை வந்துவிட்டது என்றால்.. அவளைத் தொட்டு.. என் விரல் பட்டு.. அவளை அணைத்து.. தூக்கி வந்த எனக்கு.. எப்படி இருக்கும்..? என்ற வசனத்தை அவர் எப்படி தமிழில் பேசுவார் என்று தயங்கினேன். ஆனால் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படி பேசியிருக்கிறார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

நான் எப்போதும் படத்தை தொடங்கும்போது கடவுளிடம் வேண்டுவேன். படம் வெளியாகும்போது திரையரங்கத்திற்கு சென்று மக்களான தெய்வங்களை வணங்குவேன்‌.

ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அமைதியாக இரண்டாவது ரகுமானாக உட்கார்ந்திருக்கும் என்னுடைய இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள்.

சந்திராயன் 3 விண்ணில் ஏவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சந்திரமுகி 2 பட குழுவின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்”என்றார்.

ராகவா லாரன்ஸ் பேசுகையில், “இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் வாசு மற்றும் நான், சந்திரமுகி 2 படத்தின் பாடலை கேட்பதற்காக காத்திருந்தோம். நான் அப்போது சந்திரமுகி 2 படத்தின் பாடல்களை வெற்றி பெற்றாக வேண்டும், அந்த வகையில் உழைக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால் கம்போசிங் தொடங்கும் முன் இயக்குநர் வாசுவும், இசையப்பாளர் கீரவாணியும் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழைய எம்ஜிஆர் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். டீ சாப்பிடுகிறார்கள்.  போண்டா சாப்பிடுகிறார்கள். நானும் சந்திரமுகி 2-க்கான மெட்டை கேட்க ஆவலாக காத்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு அருகில் இருக்கிற கீபோர்டில் அமர்ந்து கைவிரல்களை அசைத்தார். ஒரு மெட்டு வந்தது. அதனை வாசு சார் கேட்டார். உடனே ஓகே சொன்னார். அதுதான் நீங்கள் கேட்ட குடும்ப பாடல். அவருடைய கம்போசிங் முழுவதும் சுகிசிவம் சொன்ன குட்டிக்கதை போல் இருந்தது.  வேலைய விளையாட்டா பண்ணா ஈஸியா இருக்கும் என்கிறத இவங்க மூலம் எனக்குத் தெரிந்தது.

நான் திரைத்துறையில் நடன கலைஞராக பணியாற்றியபோது பி வாசு இயக்குநர். உதவி நடன இயக்குநராக நான் பணியாற்றியபோதும் அவர் இயக்குநர். நான் நடன இயக்குநராக பணியாற்றியபோதும் அவர் இயக்குநர். நான் வில்லனாக நடித்த போதும் அவர் இயக்குநர். அதன் பிறகு நான் இயக்குநராக மாறிய போதும் அவர் இயக்குநராக இருந்தார். நான் நடிகராக நடித்துக்கொண்டிருக்கும்போதும் அவர் இயக்குநராகவே இருக்கிறார். இந்த படத்தை நான் இயக்குவதற்காக திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த படத்தில் நான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அவர் இயக்கிருக்கிறார். தொடர்ச்சியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பி வாசுவின் இயக்கத்தில் நான் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். இந்த படத்தில் நான் வேட்டையனாக நடித்திருக்கிறேன். வேட்டையன் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் புகழ் அனைத்தும் இயக்குநர் பி. வாசுவைத் தான் சாரும்.

என்னுடைய டென்ஷன் அனைத்தையும் குறைப்பவர் வடிவேலு அண்ணன். அவருடைய காமெடிகள் தான் என் டென்ஷனை குறைக்கும். அவரை இயக்குநர் பி வாசு சார் டாக்டர் என்று சொன்னது மிகச் சரி. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்” என்றார்.