மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: மண்ணை கவ்வியது பாஜக!

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜகவைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றுள்ளது.

மேற்குவங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் 7 நகராட்சிகளில் உள்ள 148 வார்டுகளில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 140 இடங்களை வென்றுள்ளது. மீதியுள்ள 8 இடங்களில் ஆறில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் இடதுசாரியும், மற்றொன்றில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

துர்காபூர் நகராட்சி, துப்குரி, புனியாட்பூர், கூப்பர் கேம்ப், நல்ஹாத்தி, பன்ஸ்குரா மற்றும் ஹால்தியா ஆகிய 7 நகராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 148 வார்டுகளில், திரிணாமூல் காங்கிரஸ் 140 இடங்களை வென்றுள்ளது.

ஏழில் மூன்று நகராட்சிகளில், எதிர்க்கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக ஹால்தியா நகராட்சியில் உள்ள 29 வார்டுகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. துர்காபூர் மற்றும் கூப்பர் கேம்ப் நகராட்சிகளிலும் அனைத்து இடங்களையும் திரிணாமூல் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஆளும் கட்சி, ”முதல்வர் மம்தா பானர்ஜியின் வளர்ச்சித் திட்டங்களாலேயே வெற்றி கிட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பாஜகவினர் கூறும்போது, ”முக்கிய எதிர்க்கட்சியாக மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்றனர்.

அதே நேரத்தில் இடது சாரியினர், தேர்தல் நேர்மையாகவும், ஒழுங்காகவும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.