“எச்.ராஜாவை இன்னும் வீதியில் உலவ விடுவது தான் நாம் செய்யும் பெரிய தவறு!” – பாரதிராஜா

“தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே… அதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு” என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு, பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாக்கில் சனி பிடித்து, நாகரிகம் மறந்து பேசும் எச்.ராஜாவின் ட்விட்டர் பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஆறு முறை முதல்வராக இருந்த திராவிட இயக்கத்தில் சுயமரியாதைத் தலைவர், பெரியவர் கலைஞரின் குடும்பத்தை இழிசொல்லால் இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. கலைஞர் கைபிடித்த ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, உனக்குத் தவறான உறவில் பிறந்தவரா?

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சினையைத் திசைதிருப்ப, நீ நடத்தும் இந்த நாடகத்தை எம் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். யாரையோ காப்பாற்ற, யாரையோ பலியிடும் இந்தப் பிரச்சினையைச் சற்று உற்று நோக்குங்கள். அடிக்கடி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே… அதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு.

ஆளும் அரசியல்வாதிகள் நாகரிகம் மறந்து, இப்படி அநாகரிகமாகப் பேசி, தமிழ்நாட்டை ஒரு போர்க்களமாக மாற்ற நினைக்கும் இதுபோன்ற ஆட்களை, கடுமையான தண்டனை கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். விழித்துக்கொள் தமிழா, விழித்துக்கொள். சொரணை கெட்டவர்கள் அல்ல தமிழர்கள், என்றும் துணிந்து நிற்போம்.

தாய்மார்களே… தமிழகம் உங்கள் கையில். மாணவ மணிகளே… தமிழகம் உங்கள் கையில். தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம் தீய சக்திகளை. ஒன்றுபடுங்கள், உரத்த குரல் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.