ஐங்கரன் – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், மகிமா நம்பியார், காளிவெங்கட், ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன், சித்தார்த் சங்கர் மற்றும் பலர்.

இயக்கம்: ரவி அரசு

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு

மக்கள் தொடர்பு: கோபிநாதன்

நாமக்கலைச் சேர்ந்தவர் நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். புதுப்புது கருவிகளை உருவாக்கும் திறமை பெற்ற இளம் விஞ்ஞானி. ஆனால் அவரது புதிய கண்டுபிடிப்புகள் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. ஏளனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பெரிய செல்வந்தரின் கோழிப்பண்ணை ஒன்றில் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு குற்றச்செயல் ரகசியமாக நடைபெறுவதை கண்டுபிடிக்கும் ஜி.வி.பிரகாஷ், அதை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து அம்பலப்படுத்துகிறார். இதனால் அந்த கோழிப்பண்ணை அதிபரின் கோபத்துக்கு ஆளாகிறார்.

இதற்கிடையில், வடநாட்டு கொள்ளையர்கள் தமிழ்நாட்டு நகைக்கடைகளில் படுபயங்கரமாக தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். காவலாளியைக் கொன்று 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அதை எடுப்பதற்காக, கோழிப்பண்ணை அதிபரின் நான்கு வயது பெண் குழந்தையைக் கடத்தி, அந்த ஆழ்துளை கிணற்றில் போடுகிறார்கள்.

இளம் விஞ்ஞானியான ஜி.வி.பிரகாஷ், குழந்தையைக் கிணற்றில் இருந்து மீட்க புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். குழந்தையை மீட்க முயற்சி செய்கிறார். அதன்பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் படத்தின் மீதிக்கதை.

0a1d

நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் நடுத்தர வர்க்கத்து இளம் விஞ்ஞானியாக, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இயங்கும் இளைஞனாக, இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக வரும் மகிமா நம்பியாருக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இல்லை. அதனால் ‘வந்து போகிறார்’ என்பதற்குமேல் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை.

நாயகனின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஹரீஷ் பெராடி பின்னியெடுத்திருக்கிறார். முதன்மை வில்லனாக வரும் சித்தார்த் சங்கர் சிறப்பாக கடுமை காட்டியிருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் காளிவெங்கட் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்.

‘ஈட்டி’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்த இயக்குனர் ரவி அரசு, இந்த படத்தின் திரைக்கதையில் வலிமையான திருப்பங்களைப் புகுத்தி, ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படத்தை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும், சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். சண்டைக் காட்சிகள் புது ரகம்.

‘ஐங்கரன்’ – நம் காலத்துக்கு தேவையான படம்; வரவேற்கலாம்!