“எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தையே ரஜினி கூறியுள்ளார்”: அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்!

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த மக்கள் விரோத – சமூக விரோத பாசிசக் கருத்துக்களை, தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழ் வரவேற்று கட்டுரை வெளியிட்டுள்ளது. ‘காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ராஜினாமா செய்வது பிரச்சினைக்கு தீர்வாகாது என நெத்தியடி பதில் கூறி பதவிப்பித்து பிடித்து அலையும் மாதிரி தலைவர்களுக்கு ரஜினி சரியாக வேப்பிலை அடித்துள்ளார். எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய் என கூறி வரும் கம்யூனிஸ்டுகளுக்கும் ரஜினியின் பதில் புத்தியில் உறைக்க புகட்டப்பட்ட மருந்து.

சமூக விரோதிகள் யார் என்பதை கருத்து ஜாடை காட்டி அம்பலப்படுத்தி மனசாட்சி குன்றாது மக்களிடம் ரஜினிகாந்த் உண்மையை பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்.

இவ்வாறு நமது அம்மா நாளிதழில் கூறப்பட்டுள்ளது.