மராட்டிய அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம்

துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24ஆம் தேதி இரவு, மது போதையில் சுய நினைவை இழந்து, குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விசாரணைகள் முடிந்து, ஸ்ரீதேவியின் உடல் நேற்று (27ஆம் தேதி) இரவு, பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டது. அங்குள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் அவரது உடலுக்கு சில சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.

இன்று காலை முதலே ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் திரண்டுவந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஷாருக்கான், பர்கான் அக்தர், ரேகா, ராணி முகர்ஜி, கேத்ரினா கைப், அனுபம் கெர், ஜெயப்பிரதா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு மராட்டிய மாநில அரசின் மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி, மூவர்ண இந்தியக் கொடி அவரது உடலில் போர்த்தப்பட்டது. மராட்டிய போலீஸார் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஸ்ரீதேவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர், இறுதிச் ஊர்வலம் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையம் வரை நடந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தகன மையத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.