2 தேசிய விருது, 2 மாநில விருது பெற்ற தமிழ் நடிகர் – மணி

கலைக்கு மொழி அவசியமில்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் தமிழ் நடிகர் மணி.

கன்னடத்தில் வெளியான “ தேசி “ படம் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய மணி தொடர்ந்து பெங்காலி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துவருகிறார்.

கன்னடத்தில் நடித்து வெற்றிபெற்ற முதல் தமிழன் மணி என்பது குறிப்பிடத்தக்கது.

பல மொழிகளில் நடித்த அவருக்கு  இந்திய நடிகர் என அறிவித்து இந்திய அரசு  உயரிய விருதான பரம்ஸ்ரீ என்ற விருதை 2016 ம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.

2014 ம் ஆண்டு இந்திய அரசு கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுகருக்கு National  Excellence Award வழங்கி கௌரவித்தது. அப்போது பல மொழிகளில் நடித்ததற்காக மணிக்கும் அந்த விருது வழங்கப்பட்டது என்பது சிறப்பிற்குரியது.

அடுத்ததாக 2014  ஆண்டே மஹாராஷ்டிரா அரசின் கௌரவ் சம்மான் என்ற விருதையும் பெற்றார். அதே ஆண்டு பெங்காலி மொழியில் நடித்த “ நிர்மோக் “ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், பெங்காலி அரசின் “ பெங்கால் எக்ஸ்சலன்ஸ் “ விருதையும் பெற்றார்.

“நான் எத்தனை மத்திய, மாநில அரசு விருதுகளை பெற்றாலும், என் தமிழ் மொழியில் நடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்வதே எனக்கு மிகப்பெரிய விருதாக நான் கருதுவேன்.அது விரைவில் நடக்க இருக்கிறது. A.R.K.ராஜராஜா இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறேன்.  முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அதை உருவாக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க உள்ளது” என்றார் நடிகர் மணி.