நடிகர் பாலாசிங் மரணம்

நடிகர் பாலாசிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.

மேடை நாடக்க் கலைஞரான பாலாசிங், நடிகர் நாசரின் இயக்கத்தில் உருவான ’அவதாரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ’இந்தியன்’, ’சிம்மராசி’, ’ராசி’, ’புதுப்பேட்டை’, ’விருமாண்டி’ என பல படங்களில் நடித்து, ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும், கடந்த ஆண்டில் வெளிவந்த ’தானாசேர்ந்த கூட்டம்’, ’சாமி 2’, ’என்ஜிகே’, ’மகாமுனி’ போன்ற படங்களில் உறுதுணை கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் அவர் நடித்துள்ளார்.

தவிர, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஃபுட் பாய்ஸன் காரணமாக அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை உடனே வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பாலாசிங் இன்று (27-11-2019) அதிகாலை 1 மணியளவில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தை அடுத்துள்ள அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. பின்பு இறுதிச்சடங்குக்காக நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.