நொடிப் பொழுது ஆச்சரியங்கள் மட்டுமே சினிமா அல்ல!

இரு பாத்திரங்களுக்காக எழுதப்பட்ட கதையில் மூன்றாவது பாத்திரமாக கமல் நடித்திருக்கிறார். பகத் பாசிலும் விஜய் சேதுபதியும்தான் பிரதானப் பாத்திரங்கள். பகத் பாசிலின் கதை கொஞ்சம் சுவாரஸ்யம். அவரின் நடிப்பு காரணமாக இருக்கலாம்.

மற்றபடி காட்சி ஆக்கங்களில் வழக்கம் போல American Gangster, Dark Knight, Dark Knight Rises, Ghost Rider, Escobar எனப் பல ஆங்கிலப் படங்கள் மற்றும் ஓடிடி தொடர்களின் சாயலைப் பார்க்க முடியும். அனிருத் ஒரு படி மேல். ஹான்சிம்மரின் இசையையே அவரிடம் காண முடிந்தது.

கமல் நடிக்கிறார். பாத்திரத்துக்கு கனம் ஏற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் பேரன் என்கிறார்கள். மகன் மரணம் என்கிறார்கள். Drug free society என்கிறார்கள். கமல் பேசும் நீளமான வசனத்தில் ‘தீவிரம்னா கெட்ட வார்த்தை இல்ல. It’s a virtue’ என்கிற வரி மட்டும்தான் தேறுகிறது.

மொத்த பாவ்லாக்களையும் தாண்டி வீடு சேர்ந்தும் பகத் மட்டும்தான் மனதில் இருக்கிறார். Poor guy.. Godfather பட Michael Corleone மாதிரியான ஒரு பாத்திரத்துக்கான நடிகர்… சோளப்பொறி போட்டே கொன்று விடுவார்கள் போல.

ஏஜெண்ட் டீனா ஒரு நல்ல ஆச்சரியம். ஆனால் ஏவெஞ்சர்ஸின் ஸ்கார்லெட் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்னும் சூர்யா-பகத், கார்த்தி-சூர்யா, கமல்-சூர்யா என்றெல்லாம் சீக்வெல்களும் ப்ரீக்குவெல்களும் வரப் போகின்றன என்பதை நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது.

இறுதியில் அந்த ‘கலகல’ மெஷின் ரக துப்பாக்கியை சுடும்போது.. சாரி கமல், ஒரு டீக்கடைச் சிறுவன் அறிமுகப்படுத்தி, போலீஸ் நிலையத்தையே பொசுக்கித் தள்ளும் ராக்கி பாயே எங்களின் தேர்வாக நிலை நிற்கிறான்.

நொடிப் பொழுது ஆச்சரியங்கள் மட்டுமே அல்ல சினிமா என்பதை லோகேஷ் புரிந்து கொள்ள வேண்டும்.

விக்ரம், விற்க மட்டுமே பட்டிருக்கிறது.

Rajasangeethan