பாரிஸ் கஃபே – விமர்சனம்
நடிப்பு: குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார், சாய் விக்கி, நயனா சாய், பிபின் மற்றும் சிலர்
எழுத்து & இயக்கம்: சரஜ் சீலன்
ஒளிப்பதிவு: சதீஷ் ஜி
படத்தொகுப்பு: வி.ஜே.சாபு ஜோசப்
இசை: கே
கலை இயக்கம்: தாமு எம்எஃப்ஏ
நடனம்: பிரசாந்த்
தயாரிப்பு: ‘தண்டர் மீடியா & எல்வி எண்டர்டெயின்மெண்ட்’ கண்மணி ரங்கநாதன்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒலிக்கு (அர்ச்சனா குமார்), அதைவிட உயர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்து கொள்வதற்காக சென்னையில் மருத்துவராக இருக்கும் தனது அப்பா கௌதமுக்கு (குரு சோமசுந்தரம்) போன் செய்கிறார் ஒலி. அப்பா போனை எடுக்கவில்லை. அப்பா அவசர வேலையில் பிஸியாக இருப்பார் என்ற எண்ணத்தில், அடுத்து சமூக ஆர்வலரும் கட்டிடக்கலை நிபுணருமான தனது அம்மா தாராவுக்கு (அனுமோல்) போன் செய்கிறார். அம்மாவும் போனை எடுக்கவில்லை.
மறுநாள் காலையில் ஒலி தனது காதலர் கவினை (விஜய் விஷ்வா) சந்தித்து, இது குறித்து வருத்தத்துடன் பேசிக்கொண்டிருக்கையில், அப்பா கௌதம் போனில் அழைக்கிறார். அப்போது அவருடன் பேசும்போது தான், கருத்து வேறுபாடு காரணமாக அப்பாவும் அம்மாவும் பிரிந்து சென்னையில் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள் என்ற விவரம் தெரிய வருகிறது. இதை எதிர்பார்க்காத ஒலி அதிர்ச்சி அடைகிறார்.
காதல் திருமணம் செய்துகொண்டு, ‘நல்ல தம்பதி’ என்று அனைவரும் மெச்சும்படி வாழ்ந்த அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள் என்று குழம்பி கவலை கொள்கிறார் ஒலி. அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டைப் பேசித் தீர்த்து, சமரசம் செய்து, இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது காதலர் கவினோடு புறப்பட்டு சென்னை வந்து இறங்குகிறார்.
வீட்டில் தனியாக வாழும் அப்பா கௌதமை கவினோடு சென்று சந்தித்துப் பேசுகிறார் ஒலி. அப்போது கௌதம் நடந்த விஷயங்களை விவரிக்கிறார்… சில நாட்களுக்குமுன் மருத்துவ மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரான்ஸின் தலைநகரான பாரிசுக்குச் சென்றிருந்த கௌதம், அங்குள்ள ஒரு கஃபேவின் சுவரில் மாட்டப்பட்டிருந்த காதல் ஜோடி ஒன்றின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன அந்த காதல் ஜோடி தொடர்பாக, செல்வாக்குள்ள மனிதர்களின் மிரட்டலுக்குப் பயந்து, தான் செய்த ஒரு ரகசிய குற்றம் நினைவுக்கு வர, மனச் சஞ்சலமும், குற்றவுணர்வும் கொள்கிறார். சென்னை திரும்பியதும், தான் செய்த, இதுவரை சொல்லாமல் மறைத்து வைத்திருந்த குற்றம் பற்றி மனைவி தாராவிடம் மனவேதனையுடன் தெரிவிக்கிறார். யார் குற்றம் செய்தாலும், அதை சகித்துக் கொள்ளாமல், நீதிக்காகப் போராடும் இயல்புடைய சமூக சேவகியான தாரா, கணவர் கௌதம் ரகசியமாக செய்த குற்றம் அறிந்து, கோபத்தில் கொந்தளித்து, அவரைவிட்டு பிரிந்து சென்று விட்டார்….
இறந்துபோன காதல் ஜோடி விவகாரத்தில் கௌதம் செய்த குற்றம் தான் என்ன? அந்த அநீதிக்கு எதிராக அவரது மனைவி தாரா நடத்திய போராட்டம் என்ன? கௌதமும், அவரை குற்றம் செய்யும்படி மிரட்டியவர்களும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டார்களா? தண்டனை பெற்றார்களா? ஒலி விரும்பியது போல், அப்பா கௌதமும் அம்மா தாராவும் இறுதியில் மீண்டும் இணைந்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாக விடை அளிக்கிறது ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, மருத்துவர் கௌதம் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். குடும்பத்தின் நலனுக்காக எதையும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில், தனது வழக்கமான ஸ்டைலில் மிகவும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குற்றவுணர்வில் மனைவியிடம் மனம்விட்டு பேசப்போய், சிக்கலில் மாட்டித் தவிக்கும் காட்சிகளில், பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறுகிறார்.
நாயகியாக, சமூக ஆர்வலர் மற்றும் கட்டிடக்கலை நிபுணர் தாரா கதாபாத்திரத்தில் அனுமோல் நடித்திருக்கிறார். பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்தியல்களை ஏற்றுக்கொண்டு, நீதிக்காக துணிச்சலுடன் போராடும் முற்போக்குப் பெண்ணாக வரும் அவர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கணவனே குற்றம் செய்தாலும், அவரை எதிர்த்துப் போராடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, கவனம் ஈர்த்துள்ளார்.
ஒலியாக வரும் அர்ச்சனா குமார், அவரது காதலர் கவினாக வரும் விஜய் விஷ்வா, மற்றும் சாய் விக்கி, நயனா சாய், பிபின் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சரஜ் சீலன். ‘ஆணவக்கொலை’ என்னும் தீவிரமான சமூகப் பிரச்சினையை கையில் எடுத்துள்ள போதிலும், அது பற்றி உபதேசம் செய்யாமல், குடும்ப உறவுகள் மற்றும் காதலின் வழியே நெகிழ்ச்சியாக கதையை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். நாயகன், நாயகி என இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் சுயமரியாதை மற்றும் கொள்கை முரண்களைத் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளார். வசனங்களை விட கதாபாத்திரங்களின் மௌனம் மற்றும் முகபாவனைகள் மூலமே பல உணர்வுகளைக் கடத்தும் மென்மையான மேக்கிங் ஸ்டைலை இயக்குநர் கையாண்டிருப்பது சிறப்பு.
கே-யின் இசை, சதீஷ் ஜி-யின் ஒளிப்பதிவு, வி.ஜே.சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.
’பாரிஸ் கஃபே’ – சுவாரஸ்யமான கதைக்காகவும், கலைஞர்களின் சிறப்பான நடிப்புக்காகவும் பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3.75/5
