இம்மார்ட்டல் – விமர்சனம்
நடிப்பு: ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர், மாறன், ஆதித்யா கதிர், டி.எம்.கார்த்திக் மற்றும் சிலர்
எழுத்து, இயக்கம்: மாரியப்பன் சின்னா
ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன்
படத்தொகுப்பு: சான் லோகேஷ், ராஜேஷ்
இசை: சாம் சிஎஸ்
நடனம்: சபரீஷ்
கலை இயக்கம்: சிவசங்கர்
ஸ்டண்ட்: சக்தி சரவணன்
தயாரிப்பு: ‘ஏகே பிலிம் ஃபேக்டரி’ அருண்குமார் தனசேகரன்
பத்திரிகை தொடர்பு: எய்ம் சதீஷ், சிவா
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம். காட்டுவாசிகளின் கிராமம் ஒன்றில், ஓர் இளம் தம்பதியர் வசித்து வருகிறார்கள். பாறையில் ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள இளம் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். அவரும் அவரது கணவரும் தங்கள் குழந்தையின் பிறப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த நாளும் வருகிறது. குழந்தை பிறக்கிறது. (குழந்தையின் முகமோ, உருவமோ பார்வையாளர்களுக்குக் காட்டப்படவில்லை). ஆனால் அக்குழந்தையைப் பார்க்கும் மருத்துவச்சி திகிலடைந்து அலறுகிறார். அக்குழந்தையின் தந்தையிடம் குழந்தையைக் கொடுத்து “இது நமக்கு வேண்டாம். உடனே கொன்றுவிடு. ஓடு” என்று அவசரப்படுத்துகிறார். பிறந்த ஜீவராசியைக் கொல்ல மனமில்லாத அதன் தந்தை, அதை ஒரு பாறையின் மீது வைத்துவிட்டுப் போகிறார். அங்கே வரும் ஓநாய் ஒன்று வானத்தைப் பார்த்து அச்சுறுத்தும் குரலில் ஊளையிடுகிறது…
கதை தற்காலத்துக்கு வருகிறது. சென்னையில் தன் மாமாவுக்கு (மாறன்) சொந்தமான பிரிண்டிங் பிரஸில் வேலை பார்க்கிறார் நாயகன் மகி (ஜி.வி.பிரகாஷ் குமார்). அவர் பாழடைந்த அறை ஒன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த அறையின் உரிமையாளர் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட இருப்பதால், அறையைக் காலி செய்யுமாறு மகிக்கு நெருக்கடி கொடுக்கிறார். இதனால் ரூ.5000 வாடகையில் ஒரு மாற்று இடம் தேடி அலைகிறார் மகி.
இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற இளம்பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டின் ஓர் அறையை ரூ.5000க்கு வாடகைக்கு விடவுள்ளதாகவும், அதை பார்க்க வருமாறும் அழைக்கிறார் சிந்து. குறைந்த வாடகை என்பதாலும், அழைப்பது பெண் என்பதாலும் அதீத உற்சாகம் கொள்ளும் மேகி, சிந்து சொல்லும் முகவரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைகிறார். எதிர்பார்த்ததை விட மிகவும் அழகாக இருக்கிறார் சிந்து. அவரது வீடும் ரொம்ப ஆடம்பரமாக இருக்கிறது. மகிழ்ச்சியுடன் சிந்துவின் வீட்டில் குடியேறுகிறார் மகி.
ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் உள்ள சிந்துவின் அழகிலும் கவர்ச்சியிலும் ஈர்க்கப்படும் மகிக்கு, அவர் மீது காதல் வருகிறது. அதுபோல் சிந்துவும் மகி மேல் ஈர்ப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். இதெல்லாம் சில நாட்கள் மட்டும் தான். அதன்பிறகு சிந்துவின் நடத்தையிலும், அவரது வீட்டிலும் மர்மங்களும், அமானுஷ்யங்களும் இருப்பதை உணர்ந்து திகிலடைகிறார் மகி.
அதன் பிறகு என்ன நடந்தது? உண்மையில் சிந்து யார்? எதற்காக அவர் மகியை தன் வலையில் சிக்க வைத்திருக்கிறார்? அவரிடமிருந்தும், அவரது வீட்டிலிருந்தும் மகி தப்பித்தாரா? எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு திரில்லர் மற்றும் ஃபேண்டஸி ஜானரில், எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் மகியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார். அவர் தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான பயத்தையும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய தன்மையையும் அடக்கமான முறையில் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். அமானுஷ்யம் நிறைந்த நாயகியின் வீட்டிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சி, அமானுஷ்ய ஜீவராசியுடன் மோதும் காட்சி ஆகியவற்றில் மேம்பட்ட நடிப்பைக் கொடுத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார்.
நாயகி சிந்துவாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். அவருக்கு இது சவாலான பாத்திரம். ஒரே நேரத்தில் அழகாகவும், வசீகரமாகவும், அதே சமயம் அச்சுறுத்தலாகவும், கொடூரமாகவும் இருக்க வேண்டிய கதாபாத்திரம். அவர் அதை சிறப்பாகச் செய்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
நாயகனின் மாமாவாக வரும் மாறன், நண்பனாக வரும் ஆதித்யா கதிர், நாயகியின் அமானுஷ்ய வீட்டில் நடமாடும் ஆகாஷாக வரும் டி.எம்.கார்த்திக் மற்றும் குமார் நடராஜன், ஹர்ஷு மகாராஜன், சுனிதா உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மாரியப்பன் சின்னா. அவரை தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டதற்காக பாராட்டலாம். ஹாலிவுட் படங்களின் சாயலில் ரத்தக்காட்டேரி சம்பந்தப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு, அதில் காதல் காட்சிகளை இணைத்து, கொஞ்சம் பயப்படும்படியாகவும், கொஞ்சம் ரசிக்கும்படியாகவும் இப்படத்தைப் படைத்திருக்கிறார்.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன. சாம் சிஎஸ் இசை பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
‘இம்மார்ட்டல்’ – காதலுடன் கலந்த மிரட்டலான திகில் படம்; பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3/5
