ஏன் என்னை ஏதோ செய்தாய் – விமர்சனம்

நடிப்பு: டி.ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நாவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் மற்றும் சிலர்

எழுத்து, இயக்கம், படத்தொகுப்பு: டி.ஆண்டனி

ஒளிப்பதிவு: பியட்ரோ வில்லானி

பாடலிசை: ஜெய்கர் ஹரிநாத் & அசோக் ஸ்ரீதரன்

பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா, தமிழ்மணி

பின்னணி இசை: ஜோயி ரிடா

கலை இயக்கம்: கே.கே.சுரேந்திரன்

தயாரிப்பு: ’ஆண்டனி’ஸ் அடெலியர்’ சார்பில் டி.ஆண்டனி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்), சிவா

இன்றைய இளைஞர்களின் தனிமை, காதல் மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாக வைத்து, பன்னாட்டு படவிழாக்களில் திரையிடுவதற்குரிய சிறப்பான தரமும் தகுதியும் வாய்ந்த நல்ல திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற கவித்துவமான தலைப்பிலான திரைப்படம்.

தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞர் ஒருவர், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறார். அவரது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவரை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே இப்படத்தின் மையக்கரு.

சென்னையில், வசதிகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார், திருமணம் ஆகாத இளைஞர் கார்த்திக் (டி.ஆண்டனி). சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அப்பா (ஜீவா ரவி), மனைவியை இழந்த சோகத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, மகனைக் கூட நேசித்து பராமரிக்க இயலாத நிலையில் இருப்பவர். இதனால் பெற்றோர்களின் அன்பும் பாசமும் கிடைக்காத வெறுமையான மனநிலையில் வளர்ந்தவர் கார்த்திக். காதல் மீதும் திருமணம் மீதும் நம்பிக்கை இழந்தவரான அவர், புகை பிடிக்கும் பழக்கத்திற்கும், குடிப்பழக்கத்திற்கும், முன் பின் யோசிக்காமல் துடுக்குத்தனமாகப் பேசும் பழக்கத்திற்கும், பாலியல் தொழிலாளிகளிடம் உல்லாசம் அனுபவிப்பது போன்ற கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்கும் அடிமையாக இருக்கிறார். அவருக்கு இரண்டு சிறுவயது சினேகிதர்கள் மட்டுமே உற்ற துணையாக இருக்கிறார்கள்.

ஓரிரவு. கார்த்திக்குக்குத் தெரிந்த பாலியல் புரோக்கர் ஒருவர் மதுமிதா (மதுமிதா தாஸ்) என்ற வங்காளப் பெண்ணை முதன்முதலாக கார்த்திக்கிடம் அனுப்புகிறார். மதுமிதா பாலியல் தொழிலாளியாக இருந்தபோதிலும், உதட்டு முத்தம் (Lip lock) கொடுக்க கார்த்திக்குக்கு அனுமதி மறுக்கிறார். “உதட்டு முத்தம் காதல் மற்றும் எமோஷனுக்கானது. பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கானது அல்ல” என்பது மதுமிதாவின் பாலிஸி. இது கார்த்திக்குக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பாலியல் தொழிலாளிகளிலேயே மதுமிதா தனித்துவமானவராக இருப்பதை உணர்ந்து அவர் மீது ஈர்ப்புக் கொள்கிறார் கார்த்திக். இதனால் அடிக்கடி இரவுகளில் மதுமிதாவை வரவழைக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு உடல் சார்ந்ததாக மட்டுமின்றி, கருத்துப் பரிமாற்ற உரையாடல்களாகவும் மாறுகிறது. விளைவாக, கார்த்திக் தன்னை அறியாமலேயே மதுமிதாவை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.

தன்னை கார்த்திக் காதலிப்பதை உணர்ந்த மதுமிதா, தன் கடந்த காலம் பற்றி அவரிடம் விவரிக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர் ஒருவரும் தானும் காதலித்தது, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்துகொண்டது, திருமண வாழ்க்கையை முழுவதுமாக புரிந்து கொள்வதற்கு முன்பே ஒரு பெண் குழந்தைக்குத் தாயானது, கணவர் மொடாக்குடியனாகவும் பெரும் கடனாளியாகவும் இருப்பதைப் பின்னர் அறிந்து, மனமுடைந்து, கணவரை விட்டுப் பிரிந்தது, தனது அன்றாட பொருளியல் தேவைகளுக்காகவும், தன் மகளை வளர்ப்பதற்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருவது, தன் தொழில் பற்றி தெரியாத தனது மகள் ஷ்ரேயா, கொடைக்கானலில் இண்டர்நேஷனல் உறைவிடப் பள்ளி ஒன்றில் படித்து வருவது… என்ற விவரங்களைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்துபோகும் கார்த்திக், மதுமிதாவையும், அவரது மகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கிறார். இதனால் கார்த்திக்கின் காதலை மதுமிதா ஏற்றுக்கொள்ள, இருவரும் ‘லிவ்விங் டுகெதர்’ வாழ்க்கைக்கு மாறுகிறார்கள்.

கார்த்திக்குக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்பது மதுமிதாவுக்கு ஏற்கெனவே தெரியும்; என்றாலும், அவர் குடிக்கு அடிமையாக இருப்பதையும், போதையில் முன் பின் யோசிக்காமல் பிறர் மனம் நோகும்படி பேசிவிடுவதையும் இப்போது அறிந்து கலங்கிப் போகிறார். இப்பழக்கங்களிலிருந்து கார்த்திக்கை மீட்க மதுமிதா முயல, கார்த்திக்கோ குடிபோதையில் மதுமிதாவை நோக்கி கோபத்தில் அருவருக்கத் தக்க வசைச்சொல் ஒன்றை வீச, மனதுடைந்து நொறுங்கிப் போகும் மதுமிதா கார்த்திக்கை விட்டு சென்று விடுகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? மதுமிதாவின் பிரிவை கார்த்திக்கால் தாங்கிக்கொள்ள முடிந்ததா, இல்லையா? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? அல்லது நிரந்தரமாகப் பிரி ந்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாகவும் திருப்பங்களுடனும் விடை அளிக்கிறது ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நிஜ வாழ்க்கையில் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரியும் டி.ஆண்டனி, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பு செய்து, தயாரித்திருப்பதுடன், கதை நாயகன் கார்த்திக்காகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்லத் தக்க சிறப்பு அம்சம். தான் ஏற்றுக்கொண்ட அத்தனை பொறுப்புகளையும் அவர் மிக நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் என்பதற்காக அவரை மனதார பாராட்டலாம்.

தனிமையை விரும்பும் விட்டேத்தியான இளைஞராக ஆரம்பித்து, மதுமிதாவின் வருகைக்குப்பின் மெல்ல மெல்ல மாறும் நாயகன் கார்த்திக் கதாபாத்திரத்தை அருமையாக கையாண்டிருக்கிறார் டி.ஆண்டனி. காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் விதமாக இல்லாமல், மிகவும் இயல்பாகவும், நாகரிகமாகவும் தன் கதாபாத்திரத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் அவர். மதுமிதா பிரிந்து சென்ற பிறகு ஏற்படும் தவிப்பு, ஏக்கம், காதல், சோகம் என அனைத்து உணர்வுகளையும் சரியான அளவில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களைக் கண் கலங்க வைப்பதில் ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார்.

நாயகி மதுமிதாவாக மதுமிதா தாஸ் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி, அதற்குப் பொருத்தமான இயல்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் அறிமுக நடிகை போல் அல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகை போல் நடித்திருப்பது படத்துக்குப் பெரிய பிளஸ். அவரது கதாபாத்திரத்தின் எதிர்பாராத முடிவை பார்வையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான்.

நாயகனின் பால்ய சினேகிதர்களாக வருகிறவர்கள், அவர்களது தோழிகள், நாயகியின் மகளாக வரும் சிறுமி, நாயகனின் அப்பாவாக வரும் ஜீவா ரவி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் டி.ஆண்டனி, எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, விரல் விட்டு எண்ணத் தக்க குறைவான கதை மாந்தர்களைப் பயன்படுத்தி, பொருள் பொதிந்த உரையாடல்களுடன் ஓர் அழகிய, ஆழமான காதல் படத்தைப் படைத்திருக்கிறார். நாயகனும் நாயகியும் வெவ்வேறு மொழிக்காரர்கள் என்பதால் அவர்கள் பெருமளவுக்கு ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள் என்பதும் கூட ஏற்றுக்கொள்ளத் தக்கது தான்.

பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு, ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரனின் பாடலிசை, கார்த்திக் நேத்தா, தமிழ்மணி ஆகியோரின் பாடல் வரிகள், ஜோயி ரிடாவின் பின்னணி இசை, கே.கே.சுரேந்திரனின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இப்படத்திற்கு பெரிய பலம்.

’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் வித்தியாசமான திரைப்படம்; நல்ல படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது அருமையான விருந்து; ‘ஏ’ படம் என்பதால், அதற்குரிய வயதினர் அனைவரும் கண்டு களிக்கலாம்!

ரேட்டிங்: 4/5