மகுடம் – விமர்சனம்

நடிப்பு: விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, சபுமோன், அஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன் மற்றும் பலர்

திரைக்கதை & இயக்கம்: விஷால்

வசனம்: பொன் பார்த்திபன், விஷால்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன் ராமானுஜம், ஜெய் கார்த்திக்

படத்தொகுப்பு: என்.பி.ஸ்ரீகாந்த்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

நடனம்: பிருந்தா, தினேஷ்

ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன்

தயாரிப்பு: சூப்பர் குட் பிலிம்ஸ்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருக்கும் கிருபாகரன் (விஷால்), மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் மகன், மகளோடு நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மிகவும் நேர்மையான மனிதராக இருக்கும் இவர் அன்றாட பிழைப்பை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவரது மாமனாரின் (தம்பி ராமையா) வற்புறுத்தலின் பேரில் செகன்ட் ஹேன்ட் கார் ஒன்றை வாங்கி அந்த காரில் தன் மனைவி மக்களுடன் ஊட்டிக்கு டூர் செல்கிறார். சென்ற இடத்தில் மர்ம நபர்களால் மனைவி ஜமுனாவும், மகளும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதனால் வெகுண்டு எழும் கிருபாகரன் கொலையாளிகளை துவம்சம் செய்கிறார்.

இந்த கொலைக்கு தன் தந்தை லிங்கா (மற்றொரு விஷால்) தான் காரணம் என எண்ணும் கிருபாகரன், தன் தந்தையைப் பற்றி மகனிடம் விவரிக்கிறார்.

லிங்கா விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய தாதாவாக இருக்கிறார். அவருடைய மனைவியுடன் (அஞ்சலி) அவர் வாழ்ந்து வர, வில்லன்களின் துரோகத்தால் மனைவி கொல்லப்படுகிறார். இந்த விஷயம் கிருபாகரனுக்குத் தெரியாததால் தன் தந்தையை கெட்டவர் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த சமயத்தில் லிங்கா தன் மகன் கிருபாகரனைப் பார்க்க வரும் நேரத்தில் வில்லன் கும்பல் இவர்களை சுற்றி வளைக்கிறது. லிங்காவின் உண்மை முகம் மகன் கிருபாகரனுக்குத் தெரிந்ததா, இல்லையா? சுற்றி வளைத்த வில்லன் கும்பல்களிடமிருந்து தந்தையும், மகனும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே ’மகுடம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, கிருபாகரன் –லிங்கா ஆகிய இரு கதாபாத்திரங்களில் வரும் விஷால் வழக்கம் போல் பாஸ் மார்க் வாங்குகிறார். தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான முறையில் நடிப்பையும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளிலும் அதகலப்படுத்தி இருக்கிறார். நடிப்பில் இவரது அர்ப்பணிப்பு நெகிழச் செய்கிறது. குறிப்பாக மூன்று வேடங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தை தன் தோள்மேல் சுமந்து இருக்கிறார்.

நாயகி ஜமுனாவாக வரும் துஷாரா விஜயன் வழக்கம் போல் துறுதுறு கதாநாயகியாக மிளிர்கிறார். அழகாக இருக்கிறார். அளவாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் தலை காட்டி இருக்கும் மற்றொரு நாயகி அஞ்சலி. இவரும் துறுதுறு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதையும் தன் தோள் மேல் சுமந்து கடத்தி இருக்கிறார். விஷாலுக்கு டப் கொடுத்து நடித்து இருக்கிறார்.

விஷாலின் நண்பராக வரும் ஜான் விஜய், ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விஷாலின் மாமனாராக வரும் தம்பி ராமையா சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். ஏனைய நடிகர் நடிகைகளும் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

நாயகனாக நடித்திருக்கும் விஷாலே இப்படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். சீனாவில் இருந்து போலி உதிரி பாகங்கள் தயாரித்து அதன் மூலம் இந்தியாவில் பல்வேறு விபத்துகளை ஏற்படுத்தும் மாஃபியா கும்பல்களைப் பற்றிய கதைக் கருவை எடுத்துக்கொண்டு, அதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் நாயக பெருமை பில்டப் காட்சிகள் ஆக்சன் காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் என ட்ராக் மாறி வேறு ஒரு படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விஷால். இயக்குனராக அவர் இயக்கியிருக்கும் முதல் படம் இது என்பது இத்திரைப்படம் உருவாகி இருப்பதிலேயே அப்பட்டமாக தெரிகிறது. பல இடங்களில் முதிர்ச்சி இல்லாமல் காட்சிகளை பல திசைகளில் திருப்பி யுடர்ன் அடித்து எங்கெங்கோ சென்று பின்பு கடைசியில் ஒரு புள்ளியில் கதைக்குள் நுழைகிறது திரைப்படம். அதற்குள் மொத்த திரைப்படமும் முடிந்து விடுகிறது. இதனாலேயே சொல்ல வந்த விஷயம் மக்களுக்குப் போய் சேரவில்லை.

மூன்று மணி நேரத்திற்கு மேல் இப்படம் ஓடுகிறது. படத்தை இஷ்டத்துக்கு எடுத்துத் தள்ளி இருக்கிறார் இயக்குநர் விஷால். இது ஒரு ஆக்சன் படமாகவும் இல்லாமல், குடும்பப் படமாகவும் இல்லாமல், சென்டிமென்ட் படமாகவும் இல்லாமல், கேங்ஸ்டர் படமாகவும் இல்லாமல் அனைத்து விதமான படமாகவும் கலந்து கட்டி மொத்தத்தில் சொதப்பல் நிறைந்த படமாக மாறி இருக்கிறது.
சின்ன சின்ன காதல் செண்டிமெண்ட் மற்றும் குடும்ப காட்சிகளை கொஞ்சம் சிறப்பாகவே காட்சிப்படுத்தி இருந்த இயக்குநர் விஷால், அதை ஒரு சேர கோர்த்து திரைக்கதைக்குள் சரியான அளவில் நேர்த்தியாக உட்பகுத்தி ரசிக்கும்படி அமைக்காதது படத்திற்கு பெரிய மைனஸ் ஆக மாறி இருக்கிறது. அதேபோல் படத்தின் நீளம் ”எப்போடா படம் முடியும்” என்று நினைக்க வைப்பதும் இன்னொரு மைனஸ். நாயகனாக விஷால் பாஸ் மார்க் வாங்கி இருந்தாலும், இயக்குநராக விஷாலுக்கு இன்னமும் பயிற்சி தேவைப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் ”உச்சந்தி மாமு” பாடல் சிறப்பு. வழக்கம்போல் பின்னணி இசையும் பின்னி இருக்கிறார்.

ரிச்சர்டு எம்.நாதன், அபி நந்தன், ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளனர்.

படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த், பணியின்போது தூங்கிவிட்டார் என்பது போன்ற உணர்வைத் தருகிறார். அதனால்தான் வெட்டிவிட வேண்டிய காட்சிகளை அப்படியே வைத்து, படத்தின் நீளத்தைக் கூட்டியதோடு பார்வையாளர்களின் பொறுமையையும் சோதித்திருக்கிறார்.

திலீப் சுப்பராயனின் ஸ்டண்ட் வடிவமைப்பு படத்துக்கு பலம்.

‘மகுடம்’ – ஒருமுறை பார்க்கலாம்!

ரேட்டிங்: 2/5