”இதயம் முரளி’ திரைப்படம் என் அப்பாவுக்கு செய்த மரியாதை”: நன்றி அறிவிப்பு விழாவில் நாயகன் அதர்வா உருக்கம்!
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இதில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு பிரபல நடிகர் ஃபகத் ஃபாசிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஒருதலைக் காதலை வைத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் அதர்வா பேசுகையில், “தமிழ் சினிமாவில் ஒரு கலர்ஃபுல்லான லவ் ஸ்டோரி வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. பொதுவா எல்லா படத்துக்கும் ப்ரிப்பர் செஞ்சு ஸ்பாட்டுக்கு போவோம். ஆனால் இதுல ஸ்பாட்டுக்கு போயி ப்ரிப்பர் செய்வோம். எங்களுக்கு தோணுனதெல்லாம் செஞ்சோம். நான் மட்டுமே நான்கு மணிநேரம் டப்பிங் பேசுனேன். அவ்வளவு பெரிய படத்தை ரெண்டே முக்கால் மணி நேர படமா எடிட் செய்த பிரதீப்பிற்கு நன்றி. முதல்ல இப்படத்துல 5 பாட்டு இருக்குன்னு சொன்னாங்க. ஆனா அது போக போக எட்டா மாறிடிச்சு. அதுல ”இதயா…” பாடல் என்னுடைய ஃபேவரட். ஆனா இப்போ ”இதயமே இதயமே…” பிடிச்சுப் போச்சு.
சின்னி ஜெயந்த் சார் எங்க அப்பாவுடைய ரொம்ப வருஷ ஃபிரண்ட். அவர் அப்போ வீட்டுக்கு வரப்போ நான் அண்ட்ராயர் போட்டு சுத்திட்டு இருப்பேன். அவர் இந்த படத்தில் ஒரு லைன் பேசியது எனக்கு உண்மையிலேயே கண்ணு கலங்கிடுச்சு. அந்த டயலாக் ஒட்டுமொத்த படத்தையும் எலிவேட் செஞ்சுடுச்சு. ”பொட்டு வைத்த வட்ட நிலா…” பாட்டு வரப்போ நான் மட்டும் இல்ல, எங்க மொத்த குடும்பமுமே எமோஷனல் ஆகிட்டோம். அதுக்காக அவருக்கு நன்றி.
இந்த படத்தின் டைட்டில் எனக்கு க்ளோஸ் டு தி ஹார்ட். முதல்ல இந்த டைட்டில்னு சொன்னப்போ கொஞ்சம் பயந்தேன். ’இதயம்’ படம் ஹார்ட் ஹிட்டிங் லவ் ஸ்டோரி, ஆனா இந்த படம் லைட் ஹார்ட் படம் மாதிரி எடுக்குறோம், இதெல்லாம் செட் ஆகுமான்னு ஆகாஷ் கிட்ட கேட்டுட்டே இருப்பேன். அவர் ஒரே ஒரு விஷயம் தான் சொல்லிட்டே இருப்பார், என்னை நம்புங்க ப்ரோ, இந்த படம் நல்ல படமா வந்துடும்னு சொல்லிட்டே இருப்பார். அந்த விதத்துல டைரக்டர் ஆகாஷுக்கு என்னுடைய நன்றி. அவர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சிட்டாரு என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
நான் எப்போதும் என் அப்பாவுக்கு ட்ரிபியூட்டா எதாவது செய்யனும்னு நினைப்பேன். ஆனா ஒரு நண்பரா ஆகாஷ் அதை பண்ணிட்டார். அது உண்மையிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டாருன்னு எனக்கு தெரியும்” என்றார்.

ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “இரண்டரை வருஷமாக இந்த படத்துடன் பயணித்திருக்கிறோம். இப்போது பிரிவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. எல்லாருக்கும் நன்றி. படம் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருந்தது. ஆகாஷ் பாஸ்கரனுக்கு தயாரிப்பை விட இயக்கம் தான் விருப்பமெனச் சொன்னார்கள். அது அவருடைய கதையிலும் அதற்காக அவர் செய்த டீடெய்லிங்கிலும் தெரிந்தது. இயக்கம் மீதான ஆர்வம் இல்லையென்றால் இதெல்லாம் இருக்காது.
படத்தில் என்னுடன் நடித்த ஃப்ரண்ட்ஸ் கேங்கிற்கு நன்றி. அவர்களால் தான் ஷூட் என்பது ஷூட் போலவே இல்லை. அவ்வளவு ஜாலியாக இருந்தது. அதர்வா ஒரு ஜெண்டில் மேன். அவருடனான நட்பு நீண்ட நாள் வரும் என நம்புகிறேன். நான் முதன் முதலில் சைன் பண்ண படம் இதுதான். இரண்டரை வருஷம் முடிந்ததும் திரும்பவும் ஷூட்டிங்கிற்கு கூப்பிட மாட்டார்களா என யோசித்தேன். அவர்களை திரும்பவும் பார்க்க முடியாது என நினைக்கும்போது வருத்தமாகத் தான் இருக்கிறது” என்றார்.

கயாடு லோஹர் தமிழில் பேசுகையில், “இதயம் முரளி என்னுடைய முதல் தமிழ் படமாக சைன் பண்ணேன். அதனால் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நீங்க எல்லாரும் எனக்கு கொடுத்திருக்கிற லவ் மற்றும் பாராட்டு மிகப் பெரியதாக இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அமுதா கேரக்டர் என் மனசுக்கு ரொம்ப ஸ்பெஷல். அவளோட இன்னசன்ட், ஸ்ட்ரெங்த், எமோஷன் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்.
தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அவர், “ஆகாஷ் என்னை சாம் கேரக்டரையும் பண்ண சொன்னார். அதே போல் ப்ரீத்தி முகுந்தனையும் அமுதா கேரக்டருக்கு லுக் டெஸ்ட் எடுத்தார். அதனால் குழப்பமாகவே நாங்கள் இருந்தோம். ஆனால் இறுதியில் அது சரியாக அமைந்தது. நான் அமுதாவாக நடித்தபோது எல்லாரும் என்னுள் இருக்கும் பெர்ஃபார்மரை பார்த்தார்கள்.
இந்த படத்தில் இசைதான் டாப் லெவலுக்கு படத்தை கொண்டு சேர்த்தது. நான் ஒட்டுமொத்த ஆல்பத்துக்கும் ரசிகனாகிவிட்டேன். இது 2000-ம் காலகட்டத்துக்கு என்னை அழைத்து போய்விட்டது. அதுக்காக தமனுக்கு நன்றி. அவர் எனக்கு பியானோ கிஃப்ட் கொடுத்தார். அது எனக்கு உண்மையிலேயே உதவுகிறது. அதுக்கும் நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. உங்களுடன் நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. அவர்களுடன் இன்னொரு படம் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவர்களுடனான வைபை நிறைய என்ஜாய் பண்ணேன். ப்ரீத்தி முகுந்தன் எனக்கு இண்டஸ்ட்ரியில் கிடைத்த அழகான நண்பர்” என்றார்.
நடிகர் ரக்ஷன் பேசுகையில், தனது திரைப்பயணத்தில் ‘இதயம் முரளி’ ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நடிகர் டிராவிட் பேசுகையில், கோபி மற்றும் சுதாகருக்கு தனது வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
