இதயம் முரளி – விமர்சனம்
நடிப்பு: அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி (எ) நட்ராஜ், தமன் எஸ், நிஹாரிகா, ரக்ஷன், திராவிட் செல்வம், ஏஞ்சலின், அஞ்சு குரியன், ’பரிதாபங்கள்’ சுதாகர், யாஷாஸ்ரீ, ஜொனிதா, ஆடுகளம் நரேன், சின்னி ஜெயந்த், ஃபஹத் ஃபாசில் (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர்
இயக்கம்: ஆகாஷ் பாஸ்கரன்
வசனம்: ரமணகிரிவாசன்
கூடுதல் வசனம்: ஆகாஷ் பாஸ்கரன், திராவிட் செல்வம்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா, சிஹெச் சாய்
படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்
இசை: தமன் எஸ்
பாடல் வரிகள்: விவேக்
நடன அமைப்பு: அனுஷா விஸ்வநாதன்
தயாரிப்பு வடிவமைப்பு: எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார்
தயாரிப்பு: டான் பிக்சர்ஸ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, சதீஷ் (எய்ம்), சிவா
தமிழ் சினிமாவில், தான் ஒருதலையாகக் காதலிக்கும் பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் நாயகன் படம் முழுக்கத் தவிக்கும் திரைப்படம் என்றால், உடனே சட்டென்று நம் நினைவுக்கு வருவது முரளி – ஹீரா நடிப்பில், கதிர் இயக்கத்தில் வெளியான ‘இதயம்’ திரைப்படம் தான். 1991ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படம் அப்போதைய இளைஞர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்று, மாபெரும் வெற்றி அடைந்தது. அப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த படத்தின் அடிப்படைக் கதையையும், சேரன் நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் அடிப்படைக் கதையையும் மிக்ஸ் பண்ணி ஒரு புதுக்கதை எழுதி, அதில் முரளியின் மகன் அதர்வாவை நடிக்க வைத்தால் அது தான் ‘இதயம் முரளி’ திரைப்படம்!
திருச்சியைச் சேர்ந்த நாயகன் இதயா (அதர்வா) தாய் – தந்தையை இழந்தவர். அனாதையாகி விட்ட சிறுவன் இதயாவை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்பதற்காக அவரது தாய்மாமா (நட்டி என்ற நடராஜ்), திருமணம் கூட செய்துகொள்ளாமல், இதயாவை பாராட்டி, சீராட்டி வளர்த்து வருபவர்.

இதயா பத்து வயது சிறுவனாக ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது தன் வகுப்பு ஆசிரியை (ஜொனிதா) மீது அவருக்கு கிரெஷ் ஏற்படுகிறது. பின்னர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பருவத்தில் டியூஷன் வகுப்பில் சந்தித்த சாம் (பிரீத்தி முகுந்தன்) மீது காதல் கொள்கிறார். அதன்பின் கல்லூரி பருவத்தில் அமுதா (கயாடு லோஹர்) என்ற மருத்துவக் கல்லூரி மாணவி மீது காதல் வயப்படுகிறார். மேற்கண்ட எந்தப் பெண்ணிடமும் இதயா தன் காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கிறார்.
இப்படி இதயா காதலைச் சொல்லாததால் அவர் நேசித்த பெண்களெல்லாம் அவரை விட்டுப் போய்விடுகிறார்கள். சாம் ராக்கெட் விஞ்ஞானியாகி, நாசாவில் பணிபுரிய அமெரிக்கா சென்று விடுகிறார். அமுதா திருமணமாகி, கணவன் – குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இதயாவின் தாய்மாமா இதயாவுக்கு ஒரு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடிக்கிறார். திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தான் சாமை காதலித்ததையும், அதை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் பூட்டி வைத்ததையும் சாமிடம் நேரில் சொல்லிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் இதயா. இதற்காக அமெரிக்காவுக்குக் கிளம்பி போகிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? இப்போதாவது சாமிடம் தான் காதலித்த விஷயத்தை இதயா வெளிப்படுத்தினாரா? அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் கலகலப்பாக விடை அளிக்கிறது ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் இதயாவாக அதர்வா நடித்திருக்கிறார். கலகலப்பான கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். அவரது நடிப்பு முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாம் கதாபாத்திரத்தில் பிரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். கதையில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து, ரசிக்கத் தக்க விதத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது இரட்டை வேடம் எதிர்பாராத ட்விஸ்ட்.
அமுதா கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடித்திருக்கிறார். படத்தில் சிறிது நேரமே வந்தாலும், வசீகரிக்கும் அழகுடன் நினைவில் நிற்கும்படியான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
சகோதரியின் மகனது நல்வாழ்வுக்காக தன் சுகங்களைத் தியாகம் செய்யும் தாய்மாமா கதாபாத்திரத்தில் நட்டி என்ற நட்ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
‘பரிதாபங்கள்’ சுதாகர் வரும் காட்சிகள் அனைத்தும் காமெடி சரவெடி.
சிறப்புத் தோற்றத்தில் வரும் ஃபஹத் ஃபாசில் க்ளைமாக்ஸில் மாஸ் காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார்.
தமன் எஸ், நிஹாரிகா, ரக்ஷன், திராவிட் செல்வம், ஏஞ்சலின், அஞ்சு குரியன், யாஷாஸ்ரீ, ஜொனிதா, ஆடுகளம் நரேன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினர் உட்பட எவரும் எளிதில் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடிய கதையை கையில் எடுத்து, காதல் மற்றும் நகைச்சுவைக் கலவையாக – அனைவரும் கொண்டாடும் படமாக – கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார். ஆங்காங்கே திரைக்கதையில் ஏற்படும் தொய்வைத் தவிர்த்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன. இசையமைப்பாளர் தமனின் பங்களிப்பில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
‘இதயம் முரளி’ – கலகலப்பான காதல் படம்; கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 3.5/5
