லட்சுமிகாந்தன் கொலை வழக்கு – விமர்சனம்
நடிப்பு: வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸி ஆண்டனி, அருவி மதன், கன்யா பாரதி, சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர்
கதை, இயக்கம், இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்
திரைக்கதை, வசனம்: கவிதா பாரதி, தயாள் பத்மநாபன்
ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம்
படத்தொகுப்பு: பூபதி வேதகிரி
இசை: தர்புகா சிவா
பாடல் வரிகள்: பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்
தயாரிப்பு: 2எம் சினிமாஸ், டி பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்: கே.வி.சபரீஷ்
பத்திரிகை தொடர்பு: ரேகா
தமிழ் திரையுலக வரலாற்றில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. ஏனென்றால், 1940களில், லட்சுமிகாந்தன் என்ற ’பிளாக்மெயில்’ பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அன்றைய திரை நாயகனாகத் திகழ்ந்த தியாகராஜ பாகவதர், நகைச்சுவை மன்னனாகப் பெயர் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்படுத்தப்பட்டதால் அது அன்றும் இன்றும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வழக்கு விவகாரத்துக்கும், தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்துக்கும் துளியளவு கூட சம்பந்தம் கிடையாது. எனினும், பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில், இந்த திரைப்படத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படக்கதை 1970களில் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்து இளைஞன் நாயகன் அறிவுமதி (வெற்றி). சூடாமணி (லிஸி ஆண்டனி) என்ற ஏழை விதவைப் பெண்மணியின் மகனான அறிவுமதி, அவரது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கிறார். பின்னர் தன் நண்பர் மூர்த்தியுடன் (மாறனுடன்) சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அறிவுமதிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மல்லிகாவுடன் (பிரிகிடா சாகா) காதல் ஏற்படுகிறது. பின்னர் பெரியோர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருட்டுத் தொழிலை கைவிடுமாறு அறிவுமதியை வற்புறுத்துகிறார் மல்லிகா. தன் காதல் மனைவிக்காக திருட்டுத் தொழிலை கைவிட ஒப்புக்கொள்ளும் அறிவுமதி, கடனுக்கு ஈடாக தங்கள் நிலப்பத்திரம் லட்சுமிகாந்தன் (கவிதா பாரதி) என்ற செல்வந்தரிடம் அடமானம் வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பத்திரத்தை மட்டும் திருடிக் கொண்டு வந்துவிட்டு, திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போடுவதாகவும் சத்தியம் செய்கிறார்.
இதன்படி, தங்கள் நிலப்பத்திரத்தைத் திருடுவதற்காக இரவில் லட்சுமி காந்தனின் வீட்டுக்குள் நுழைகிறார் அறிவுமதி. அந்த நேரம், தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய லட்சுமிகாந்தன் முயல்வதைப் பார்த்து திடுக்கிடும் அறிவுமதி, சிறுமியைக் காப்பாற்ற முயற்சி செய்ய, அவருக்கும் லட்சுமிகாந்தனுக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் லட்சுமிகாந்தனைக் கத்தியால் குத்தி கொலை செய்கிறார் அறிவுமதி.
கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸில் சரணடையும் அறிவுமதிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது.
சிறையில் அறிவுமதி தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய இறுதி நேரத்தில், அவர் தூக்கில் தொங்கவிடப்படுவதை உறுதி செய்வதற்காக நீதிபதி அன்னம் (கன்யா பாரதி), சிறை அதிகாரி சிவானந்தன் (ரங்கராஜ் பாண்டே), தூக்கிலிடும் பணியை நிறைவேற்றுபவரான பெரியவர் தர்மன் (சுப்பிரமணியம் சிவா) ஆகியோர் வந்திருக்கிறார்கள். அவர்களிடம், ’தூக்கிலிடுவதும் கொலை தானே; அக்கொலைக் குற்றத்தை அரசு செய்யலாமா?’ என்று ஆவேசப்படுகிறார் அறிவுமதி.
அந்த இறுதி நேரத்தில் அறிவுமதி முன்வைத்த வாதம் ஏற்கப்பட்டு விடுவிக்கப்பட்டாரா? அல்லது தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் அறிவுமதியாக வெற்றி நடித்திருக்கிறார். படித்த கிராமத்து இளைஞராக, வறுமை காரணமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, சிறையில் சுயசரிதை எழுதுபவராக, மரண தண்டனைக்கு எதிராக தர்க்கம் புரிபவராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, தன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார்.
நாயகி மல்லிகாவாக பிரிகிடா சாகா நடித்திருக்கிறார். முதலில் நாயகனின் காதலியாக, பின்னர் காதல் மனைவியாக, அதன் பின்னர் இரண்டு குழந்தைகளின் தாயாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகனின் அம்மா சூடாமணியாக வரும் லிஸி ஆண்டனி, நாயகனின் நண்பர் மூர்த்தியாக வரும் மாறன், ஆசிரியர் சற்குணமாக வரும் சரவணன், வேல்முருகனாக வரும் அருவி மதன், லட்சுமிகாந்தனாக வரும் கவிதா பாரதி, நீதிபதி அன்னமாக வரும் கன்யா பாரதி, சிறை அதிகாரி சிவானந்தனாக வரும் ரங்கராஜ் பாண்டே, தூக்கிலிடும் பணியை நிறைவேற்றும் தர்மனாக வரும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், கவிதா பாரதியோடு சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். யதார்த்தமான காட்சிகள் படத்துக்கு பலம் என்றாலும், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். வசனங்களின் ஆதிக்கம் பார்வையாளர்களுக்கு அயற்சியை ஏற்படுத்துகிறது.
இயக்குநர் தயாள் பத்மநாபன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சட்டமும், நீதியும் குற்றவாளிகளைத் திருத்துவதற்கு பயன்பட வேண்டுமே தவிர, தண்டிப்பதற்கோ, உயிரைப் பறிப்பதற்கோ பயன்படக் கூடாது என்ற நல்ல கருத்தை சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். படம் ஆவணப்படமாக மாறும் அபாயத்தைத் தவிர்த்திருக்கலாம். பாரதியார் மற்றும் பாரதிதாசனின் பாடல் வரிகளைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.
தர்புகா சிவாவின் இசை, எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு, பூபதி வேதகிரியின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ – கருத்தாழம் உள்ள படம்; பார்க்கலாம்!
ரேட்டிங்: 3/5
