ராவ் பகதூர் – விமர்சனம்
நடிப்பு: சத்யதேவ், விகாஸ் முப்பலா, தீபா தாமஸ், பால பராசர், ஆனந்த் பாரதி, பிரனாய் வாகா, மாஸ்டர் கிரண், இயக்குநர் வெங்கடேஷ் மகா (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர்
எழுத்து, இயக்கம், படத்தொகுப்பு: வெங்கடேஷ் மகா
ஒளிப்பதிவு: கார்த்திக் பர்மர்
இசை: ஸ்மரன் சாய்
நடனம்: ஷ்ரவண் முப்பிரி
ஆடை வடிவமைப்பு: ஜி.என்.எஸ்.ஷில்பா
கலை இயக்கம் & தயாரிப்பு வடிவமைப்பு: ரோஹன் சிங்
தயாரிப்பு: ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஏ+எஸ் மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் ஃபண்டு, மஹாயானா மோஷன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்: சிண்டா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, ஈஸ்வரன் விஜயராகவன்
வழங்குபவர்: ஜிஎம்பி எண்டர்டெயின்மெண்ட்
பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார், எஸ்2 மீடியா
(தெலுங்கு பேசும் இத்திரைப்படம் ஆங்கில சப்-டைட்டிலுடன் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கிறது.)
இப்படக்கதை, மன்னராட்சிக் காலம் முடிந்து மக்களாட்சிக்காலம் நடைபெறும் 1991ஆம் ஆண்டு, ‘புவனாலயம்’ என்ற பிரமாண்ட கற்பனை அரண்மனையில் தொடங்குவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு மன்னர் பரம்பரையின் வாரிசான புவனம் ராமப்பா ராவ் பகதூர் (சத்யதேவ்) வாழ்ந்து வருகிறார். வயோதிகரான அவர் கல்லீரல் புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். அதே நேரத்தில் அவர் அளவுக்கதிகமாக மது அருந்தும் குடிப்பழக்கம் உள்ளவராகவும், சற்று மனநிலை சரியில்லாதவராகவும் இருக்கிறார்.
ராவ் பகதூரின் காதல் மனைவி ரேணுகா (தீபா தாமஸ்), தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு, ஒரு இருட்டறைக்குள் தன்னைத் தானே அடைத்துக் கொண்டு, எவரையும் பார்க்கவோ, பேசவோ துளியளவும் விருப்பம் இல்லாதவராக வாழ்ந்து வருகிறார்.
ராவ் பகதூர் – ரேணுகா தம்பதியின் மூத்த மகனான லவனப்பா என்ற லவனா (பிரனாய் வாகா), உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்பட்ட தன் தந்தை, தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும் விதமாக தனிமைச் சிறையில் தன்னை அடைத்துக் கொண்டுள்ள தனது தாய் ஆகியோரது சுமையால் தவித்துக் கொண்டிருக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் புவனாலயம் அரண்மனைக் குளத்துக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சிறுவனும் ராவ் பகதூர் – ரேணுகா தம்பதியின் இளைய மகனுமான குசுமப்பா என்ற குசுமா (மாஸ்டர் கிரண்), அடிக்கடி ராவ் பகதூரின் கனவில் ஆவி போல் வந்து, தொந்தரவு செய்து அச்சுறுத்துகிறான்.
இந்நிலையில், ராவ் பகதூர் இன்னும் நான்கு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்திருந்த போதிலும், அவர்களது கணிப்பை மீறி அவர் மரணிக்காமல் கூடுதல் நாட்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காரணம், அவரது மனதுக்குள் விடை தெரியாமல் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரமான சந்தேகம் தான். ”அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக நிரந்தரமாக கண்ணை மூடிவிடுவேன்” என்று தனது நண்பரும் மருத்துவருமான நாராயணச்சாரியிடம் (விகாஸ் முப்பலா) தெரிவிக்கிறார் ராவ் பகதூர்.
ராவ் பகதூரின் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் அந்த பயங்கரமான சந்தேகம் தான் என்ன? அவரது மனைவி ரேணுகா ஏன் தன்னைத் தானே இருண்ட அறைக்குள் எட்டு ஆண்டு காலமாக சிறை வைத்திருக்கிறார்? தங்களது இளைய மகனும் சிறுவனுமான குசுமா தற்கொலை செய்து கொண்டது ஏன்? அவன் ராவ் பகதூரின் கனவில் அடிக்கடி ஆவி போல் வந்து தொந்தரவு செய்வது ஏன்? ராவ் பகதூரின் சந்தேகம் மற்றும் அவரது குடும்பத்தினரின் பிரச்சனைகள் அனைத்தையும் நன்கறிந்த மருத்துவர் நாராயணச்சாரி, அவற்றுக்கு தீர்வு காண என்ன முயற்சி எடுத்தார்? அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு சமூக – உளவியல் அம்சங்களுடன் கூடிய அற்புதமான விடை அளிக்கிறது ‘ராவ் பகதூர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இக்கதையின் நாயகனாக, மன்னர் பரம்பரையைச் சேர்ந்த புவனம் ராமப்பா ராவ் பகதூராக சத்யதேவ் நடித்திருக்கிறார். படம் முழுக்க வியாபித்திருக்கும் அவர், மொத்தப் படத்தையும் வலிமை வாய்ந்த ஒற்றைத் தூணாக தாங்கிப் பிடித்திருக்கிறார். இளமைப் பருவத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட துடிப்பான இளைஞராகவும், முதுமைப் பருவத்தில் தீராத நோயும், சந்தேகப் பேயும் ஆட்டுவிக்கும் பிற்போக்கான குடிகார வயோதிகராகவும் இருவேறு பரிமாணங்களில் பிரமாதமாக நடித்திருக்கிறார். சத்யதேவின் ஆளுமை மிக்க நடிப்பையும், அவர் தாங்கியிருக்கும் கதாபாத்திரத்தையும் சலிப்பே இல்லாமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். பாராட்டுகள் சத்யதேவ்!
முதலில் நர்ஸாகவும், பின்னர் நாயகனின் காதல் மனைவி ரேணுகாவாகவும் தீபா தாமஸ் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி புரிந்துகொண்டு, அமைதியான, வசீகரமான நடிப்பை, தன் விழிகள் மூலம் பெருமளவு வெளிப்படுத்தி, பார்வையாளர்களைக் கவருகிறார். இறுதியாக ராவ் பகதூரின் சடலத்தின் முன் அவர் வெளிப்படுத்தும் ரகசியம் ரசிப்புக்குரியது.
நாயகனின் நண்பராகவும், மருத்துவராகவும் நாராயணச்சாரி என்ற கதாபாத்திரத்தில் விகாஸ் முப்பலா நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட, நாயகனுக்கு இணையாக பிச்சு உதறியிருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அரண்மனை ரகசியங்களை அவர் கையாளும் விதம் அற்புதம், ரேணுகாவைப் போலவே இவரும் ராவ் பகதூரின் சடலத்தின் முன் வெளிப்படுத்தும் மற்றுமொரு ரகசியம், பார்வையாளர்களை எகிறிக் குதித்து கைதட்ட வைக்கிறது.
ராவ் பகதூர் – ரேணுகா தம்பதியின் மூத்த மகன் லவனப்பா என்ற லவனாவாக வரும் பிரனாய் வாகா, இளைய மகன் குசுமப்பா என்ற குசுமாவாக வரும் மாஸ்டர் கிரண், அச்சம்மாவாக வரும் பால பராசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதனாக வரும் ஆனந்த் பாரதி, புவனம் அரச வம்சத்தின் மூதாதையர் தலைவராக சிறப்புத் தோற்றத்தில் வரும் இயக்குநர் வெங்கடேஷ் மகா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகில் முக்கியமான முன்னணி இயக்குநராகத் திகழும் இயக்குநர் வெங்கடேஷ் மகா இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்புப் பணியையும் மேற்கொண்டிருக்கிறார். அரச வம்சத்தின் போலி கௌரவம், நிறவெறி போன்ற பிற்போக்கு அம்சங்களை நகைச்சுவையினூடே தோலுரித்துக் காட்டி, இப்படத்தை மகத்தான அற்புதப் படைப்பாகப் படைத்தளித்திருக்கிறார். உளவியல் சிக்கலை உள்ளடக்கிய அழுத்தமான கதையை, வழக்கமான மசாலாப் பூச்சுகள் எதுவும் இல்லாமல், வித்தியாசமான கோணத்தில் நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும் நகர்த்திச் சென்றுள்ளார். புதுமையான பொழுதுபோக்கு திரைப்படங்களை விரும்பும் பார்வையாளர்கள் கொண்டாடத்தக்க விதத்தில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். பாராட்டுகள் இயக்குநர் வெங்கடேஷ் மகா!
முற்போக்கான சமூகக் கருத்துகளைக் கொண்ட பிரமாண்டமான காமெடி – சஸ்பென்ஸ் – உளவியல் ஜானரிலான ஒரு வெற்றிப்படத்துக்குத் தேவையான இசையை ஸ்மரன் சாயியும், ஒளிப்பதிவை கார்த்திக் பர்மரும், கலை இயக்கத்தை ரோஹன் சிங்கும், ஆடை வடிவமைப்பை ஜி.என்.எஸ்.ஷில்பாவும், நடனத்தை ஷ்ரவண் முப்பிரியும் வழங்கி, படத்தின் தரத்துக்கும் நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
‘ராவ் பகதூர்’ – புதுமைகள் நிறைந்த அற்புதமான பொழுதுபோக்குத் திரைப்படம்; காணத் தவறாதீர்கள்!
ரேட்டிங்: 4/5
