பள்ளி கல்விக்கான மாநில கல்வி கொள்கை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதி செய்ய வேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது. அதை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ல் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்தனர். தமிழக அரசிடம் அறிக்கையை 2024 ஜூலை 1-ல் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:

ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளை பேச, படிக்க, எழுத வைப்பதே முதன்மை நோக்கம். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்ட விதிகளின்படி, மாணவர்கள் கூடுதலாக தம் தாய்மொழியை கற்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதி செய்ய வேண்டும். அதேநேரம், ஆண்டு இறுதித் தேர்வுகளின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளின்படி தேர்ச்சி இருக்க வேண்டும்.

10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். மாணவர் நலன் கருதி, பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியபோது, ‘‘பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்பை நடப்பு ஆண்டில் இருந்தே செயல்படுத்த உள்ளோம். சமக்ர சிக்‌ஷா நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு கற்றல் அடைவு தேர்வு:

பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்கள் வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல், எண்ணறிவு திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சார் திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களின் திறன்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க, பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு தொடர் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவு (ஸ்லாஸ்) தேர்வு நடத்தப்படும்.

அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும், இந்த திட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டுவரவும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றாம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்ற வேண்டும். கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு குறைதீர்வு கற்பித்தலை வழங்கி வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டு வரப்படுவார்கள். முதல் தலைமுறை கற்போர், பழங்குடியினர், பெண் குழந்தைகளை பள்ளியில் தக்கவைக்கவும், அவர்களது கற்றல் விளைவுகளை முன்னேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

பாகுபாடு, பாலின அடிப்படையிலான வன்முறை, முடிவெடுக்கும் திறன் போன்ற வாழ்க்கைத் திறன் சார்ந்த சமூக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வளர்இளம் பருவத்தினர் சரியானவற்றை தெரிந்தவர்களாக, நெகிழ்வுத்தன்மை உடையவர்களாக, திறன் பெற்றவர்களாக வளரத் தேவையான கலைத் திட்டம் இணைக்கப்படும்.

புலம்பெயர்ந்தோர், பழங்குடியின குழந்தைகளுக்கு இருமொழிக் கல்வி வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களது கற்றல் இடைவெளியை குறைக்கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களும் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். பாரம்பரிய, நவீன விளையாட்டுகளை இணைக்க வேண்டும். அதில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

மனப்பாடம் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை விட்டு, பாடக் கருத்துகளை புரிந்து கொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவை புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறவேண்டும்.

‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிபோல கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.