“என்றென்றும் என் பேர் சொல்லும் படமாக ‘ டிராஃபிக் ராமசாமி’ இருக்கும்!” – எஸ்.ஏ.சந்திரசேகரன்

தள்ளாத வயதிலும் தளராத சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை  இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசியதாவது:

இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ, என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார். ஒரு கட்டத்தில்  நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி, என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல், ‘எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும், சம்பளமே வேண்டாம்’ என்று கூடவே இருந்தார்.

ஒருநாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் ‘ஒன் மேன் ஆர்மி’ என்கிற வாழ்க்கைக் கதை. படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறியபோது என்னால் மறுக்க முடியவில்லை.

கதையைப் படித்து முடித்தபோது, டிராஃபிக் ராமசாமியும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு, அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில் தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என  வியந்து போனேன் .

நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறேன் என யோசித்தபோது  இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன். என்றென்றும் என் பேர் சொல்லும் ப்டமாக இது நிச்சயம் இருக்கும். .

நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில்  இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி  இணைந்தார். . இளம் கதாநாயகன் போன்ற பாத்திரத்திற்கு ஆர்.கே.சுரேஷ்  வந்தார். ஒரேயொரு காட்சி என்றாலும்  நடிக்க ஒப்புக்கொண்ட  விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான்  எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகள் மட்டும் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் பிரகாஷ்ராஜ் . இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.

இப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும் . சர்ச்சைகள் கொண்ட கதை தான் இது என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் படமான ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

விழாவில் இயக்குநர் விக்கி , நடிகர் ஆர்.கே.சுரேஷ் , நடிகைகள்  ரோகிணி, உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.