“எங்களுக்கு ஆகஸ்டு 29ஆம் தேதி திருமணம்”: ‘யோகிடா’ படவிழா மேடையில் விஷால் – சாய் தன்ஷிகா கூட்டாக அறிவிப்பு!

சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்கள் மற்றும் டிரெய்லரை வெளியிட்டார்.

இந்த மேடையில் பேசிய சாய் தன்ஷிகா, “என்ன பேபி… சொல்லிறலாமா?” என்று விஷாலிடம் காதலுடன் கேட்டு அனுமதி வாங்கிக்கொண்டு, விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதை அறிவித்தார்.

இதன்பின் நடிகர் விஷால் பேசும்போது, “சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஓர் அற்புதமான பெண். கண்டிப்பாக சினிமாவில் வடிவேலு – கோவை சரளா போன்று சண்டை போடும் ஜோடியாக நாங்கள் இருக்க மாட்டோம். காரணம், அந்த சண்டை காட்சிகளை பார்க்கும்போது நான் கொஞ்சம் சூதானமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எங்களுக்குள் சண்டை வராது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தான் சொல்வேன். கடவுள் எப்போதுமே சிறந்ததை கடைசியில் தான் தருவார். நாங்கள் இருவரும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்க உள்ளோம். திருமணத்துக்குப் பிறகும் தன்ஷிகா சத்தியமாக நடிப்பார். அதற்கு எந்த ஒரு தடையும் நான் போட மாட்டேன்” என்று விஷால் கூறினார்.