தமிழக திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசுடன் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்களும், அரசு அதிகாரிகளும் எங்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டனர்.

வரி வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுக்க அரசு தரப்பிலும், எங்களின் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

.திரைத்துறையினர் சார்பில் 8 பேர் குழுவில் உள்ளனர். அரசுத் தரப்பில் எவ்வளவு பேர் என்று தெரியவில்லை.

இந்த குழு அமைக்கப்படும் முடிவைத்  தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திரையரங்குகள் இயங்கும்.

டிக்கெட் கட்டணம் எப்போதும் போல இருக்கும். ஆனால், அக்கட்டணத்துடன் – மற்றைய பொருட்களைப் போல – ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வழக்கமான டிக்கெட் விலை 120 ரூபாயோடு, 28% ஜிஎஸ்டி 33.06 ரூபாய் சேர்த்து புதிய டிக்கெட்டின் விலை ரூ.153 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.