பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட கற்கள் குவிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ஆரியத்துவ வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் 3 லாரிகளில் பிரமாண்டமான கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இது குறித்து ராம் ஜென்ம பூமிக்கான விஸ்வ இந்து பரிஷத் பிரதிநிதி பிரகாஷ் குமார் குப்தா கூறும்போது, “ராமர் கோயில் கட்டுவதற்கு தேவையான பிரமாண்டமான கற்களை ஏற்கெனவே அயோத்திக்கு கொண்டுவந்தோம். ஆனால், இதற்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய உத்தரப்பிரதேச அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் 3 லாரிகளில் கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்றார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு தேவையான பொருட்களை விஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு அங்கமான ராம் ஜென்மபூமி நியாஸ் சேகரித்து வருகிறது. இதற்காக அயோத்தியில் ராம்சேவக்புரத்தில் ஒரு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டு வரப்படும் கற்களில் சிற்பங்கள் செதுக்கும் பணி நடைபெறுகிறது.