சிலை கடத்தலில் ஈடுபட்ட இரண்டு அமைச்சர்கள் யார்?

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேல், “சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பான ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது.

சிலை கட்த்தலில் ஈடுபட்ட அந்த 2 அமைச்சர்கள் யார் என்பது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ஆம்பூரில் கூட்டாக பேட்டியளித்த தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில்,  எங்கள் இருவருக்கும் எதிராக திட்டமிட்டு பொய் செய்தியை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த 2 அமைச்சர்கள் நாங்கள் என்பது முற்றிலும் பொய்யானது. செய்தியை வெளியிட்ட அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.