சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கின் முழு பின்னணி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்தது.
ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து வைத்ததாகக் கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் 2020 ஜூன் 19-ம் தேதி விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் மறுநாள் வழக்கு பதிவு செய்து, சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
போலீஸார் கடுமையாக தாக்கியதில் காயமடைந்த பென்னிக்ஸ் ஜூன் 22-ம் தேதி இரவிலும், ஜெயராஜ் 23-ம் தேதி அதிகாலையிலும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தை காவல் துறையினர் மறைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், சாத்தான் குளத்தில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தினர்.
மதுரை உயர் நீதிமன்ற கிளை ஜூன் 24-ம் தேதி தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, அடுத்தடுத்த பல உத்தரவுகளை பிறப்பித்தது. இருவரையும் காவல் துறையினர் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தது பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது.
2020 ஜூன் 25-ம் தேதி இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. பொதுமக்களின் தொடர் போராட்டம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தலையீடு காரணமாக, இந்தச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்ஸிஸ், வெயில் முத்து ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 10 பேரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை முதலில் உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிசிஐடி விசாரணைக்கும், பின்னர் சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டு, மதுரையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை காலத்திலேயே, பால்துரை உயிரிழந்தார்.
இதையடுத்து, மீதமுள்ள 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனைவரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது.
அம்னிஸ்டி இன்டர்நேஷனல், ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு வந்தன. ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி மற்றும் ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிதி உதவிகளையும் வழங்கினர். இந்த பகுதியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தியும், இக்குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் முக்கிய பிரச்சார பொருளாக இந்த விவகாரம் இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த தீர்ப்பை சாத்தான்குளம் மக்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழக மக்களும் வரவேற்றுள்ளனர். சாத்தான்குளத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் நேற்று மாலை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
