இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் ‘சங்கத் தலைவன்’: படப்பிடிப்பு துவங்கியது

தமிழ்ச் சூழலில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கியமான, சமூக அக்கறையுள்ள நாவல் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’. இந்நாவல், நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித் தொழில் மற்றும் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஒரு முற்போக்கு இயக்கத்தின் பின்னணியில் விவரிக்கிறது.

இந்த நாவல் ‘சங்கத் தலைவன்’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. இதை இயக்குனர் மணிமாறன் இயக்க, சமுத்திரக்கனி, கருணாஸ், ‘அறம்’ படத்தில் நடித்த சுனுலட்சுமி, விஜய் டிவி தொகுப்பாளர் ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ‘கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (22ஆம் தேதி) சென்னையில் தொடங்கியது. இதன் துவக்க நிகழ்வில் இயக்குனர் வெற்றி மாறன், இயக்குனர் மணிமாறன், ‘தறியுடன்’ நாவலாசிரியர் பாரதிநாதன், நடிகர் கருணாஸ், நடிகை ரம்யா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.