“ரஜினியும், கமலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தவர்கள் தான்!” – கே.எஸ்.ரவிகுமார்

சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சண்டிக்குதிரை’. இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடைபெற்றது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இவ்விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், “சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள். எது சின்ன படம், எது பெரிய படம்? யார் நிர்ணயிப்பது? வெற்றியை வைத்து தான்.

கமல் நடித்த ‘அவர்கள்’ படம் வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்று முடிச்சு’ படம் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது தான். நான் இயக்கிய முதல் படமான  ‘புரியாத புதிர்’ முப்பது லட்சம் ரூபாய் செலவிலும், சேரன்  பாண்டியன் முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும் தான் எடுக்கப் பட்டன. படங்கள் வெற்றிபெறும்போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள்.

சின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள். இன்ட்ரஸ்டிங்கா எடுங்க. அப்பத் தான் படமும் ஓடும், நீங்களும் ‘பெரிய’ என்கிற இடத்தை  அடைய முடியும்” என்றார்.

0

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பேசுகையில், “இப்படத்தின் இயக்குனர் அன்புமதி, நடிகர் ராஜ்கமல் இருவரும் சின்னத்திரையிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் ‘சண்டிக்குதிரை’ படத்தை எடுத்து முடித்து இசை வெளியீட்டு விழா வரை வந்திருக்கிறர்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நான் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தபோது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன். ‘கதை நன்றாக இருக்கு. சின்னத்திரை இயக்குனர் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுங்கள்’ என்று தயாரிப்பாளரிடம் சொல்லி வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குனராகவும், நடிகராகவும் நிற்கிறேன்…அதனால் வெற்றி உங்கள் அருகில் தான் இருக்கிறது” என்றார்..

விழாவில் ரவிமரியா, ஜாக்குவார் தங்கம், லியாகத் அலிகான், அரவிந்தராஜ், கஞ்சா கருப்பு, சுபாஷ் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் பிரகாசம், நாயகன் ராஜ்கமல், நாயகி மானஸா, இசையமைப்பாளர் வாராஸ்ரீ, ஒளிப்பதிவாளர் வீரா, பாடகர் பிரசன்னா, இயக்குனர் அன்புமதி ஆகியோர் பேசினர்.