“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்!” – ஓ.பி.எஸ்.

“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்” என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜல்லிகட்டு விளையாட்டு நடத்துவது தொடர்பாக தமிழகத்தின் தார்மீக உரிமையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

தமிழக அரசின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கவனமாக கேட்டுக் கொண்டார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக பிரதமர் கூறினார்.

அதேவேளையில், ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் என்னிடம் உறுதியளித்தார்.

இனி, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு விரைவில் எடுக்கும். நன்மையே யாவும். நன்மையாகவே முடியும். பொறுமையாக இருங்கள்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.