மைலாஞ்சி – விமர்சனம்

நடிப்பு: ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி, செந்தி, தட்சா பிள்ளை, கலையரசன் கண்ணுசாமி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அஜயன் பாலா

இசை & பாடல் வரிகள்: இளையராஜா

ஒளிப்பதிவு: செழியன்

படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்

கலை இயக்கம்: லால்குடி இளையராஜா

நடன அமைப்பு: தீனா & அர்ச்சனா

தயாரிப்பு: ’அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ்’ டாக்டர் பா.அர்ஜுன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில், ‘மைலாஞ்சி’ என்ற பெயரில், ’பறவைகள் பூங்கா’ ஒன்றை நடத்தி வருகிறார் கதையின் நாயகி சாரு (கிரிஷா குரூப்). இதனால் இப்படத்துக்கு ‘மைலாஞ்சி’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

நாயகி சாரு, சிறுவயதிலிருந்தே பெற்றோர்களின் அரவணைப்பின்றி, சித்தியால் பராமரித்து வளர்க்கப்பட்டு வருபவர். எனினும், பெற்றோர் வழியில் வந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரியாக இருப்பவர். இந்த சொத்துகள் தன் ஆதிக்கத்தை விட்டு வேறு நபருக்கு சென்றுவிடக் கூடாது என்று நினைக்கும் சித்தி, இதற்காக தன் தம்பி மைக்கேலுக்கு சாருவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால், மைக்கேல் மொடாக்குடியனாக இருப்பதால், இந்த திருமண ஏற்பாட்டில் துளியும் விருப்பமில்லாத சாரு, சித்தியின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு, எவரையாவது காதலித்து அவருடன் வெளியூருக்குத் தப்பிச் சென்றுவிட வேண்டும் எனத் திட்டமிடுகிறார்.

இதன்படி, தன் வீட்டின் ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடியிருக்கிற – மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றுகிற – கதிர்வேலன் கார்ல் மார்க்ஸ் என்ற இளைஞரை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால், அவரது காதலை தெரியப்படுத்துவதற்கு முன்பே, கதிர்வேலன், பணி மாறுதல் காரணமாக வீட்டைக் காலி செய்துவிட்டு சென்னைக்குச் சென்றுவிடுகிறார்.

அந்த சமயம், காட்டு உயிரினங்களைப் படம் பிடிக்கும் ‘ஒயில்டு லைஃப்’ புகைப்படக்காரரான சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்), காண்பதற்கு அரிதான ஓர் அரியவகை பறவையைப் புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு அவருக்கு சாருவுடன் நட்பு ஏற்படுகிறது. அது நாளடைவில் சூர்யாவுக்குள் காதலாக வளர்கிறது. தனது காதலை சாருவுக்கு தெரிவித்துவிடலாம் என்று சூர்யா நினைக்கையில், அவரிடம் கதிர்வேலன் மீது தான் கொண்டிருக்கும் காதலைச் சொல்லும் சாரு, சென்னைக்குச் சென்றுவிட்ட தன் காதலருடன் தன்னை சேர்த்து வைக்க உதவுமாறு வேண்டிக்கொள்கிறார்.

பிறகு என்ன நடந்தது? இறுதியில் வெற்றி பெற்றது சாருவின் ஒருதலைக் காதலா? அல்லது சூர்யாவின் ஒருதலைக் காதலா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் சூர்யாவாக ஸ்ரீராம் கார்த்திக்கும், நாயகி சாருவாக கிரிஷா குரூப்பும் நடித்திருக்கிறார்கள். இருவரும் அவரவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, நட்பையும் காதலையும் நளினமாகவும் நாகரிகமாகவும் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முனீஷ்காந்த், சிங்கம்புலி, செந்தி, தட்சா பிள்ளை, கலையரசன் கண்ணுசாமி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஜயன் பாலா. ‘வெண்ணிற இரவுகள்’ என்ற பிரசித்தி பெற்ற ரஷ்ய நாவலைத் தழுவி இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர், கால மாற்றத்துக்கேற்ற புதுமைகளைப் புகுத்தாமல், உளவியல் சிக்கல், தீவிபத்து என்றெல்லாம் வேண்டாத அம்சங்களைப் புகுத்தி ஜல்லியடித்திருப்பதால் எல்லாமே செயற்கையாக இருக்கிறது. இதனால், அழுத்தமில்லாத காதல் கதையோடு பார்வையாளர்கள் ஒன்ற முடியவில்லை என்பது பெருங்குறை.

ஊட்டியின் இயற்கை எழிலை கண் குளிர கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனின் ஒளிப்பதிவு அருமையானது; அபாரமானது; பாராட்டுக்கு உரியது.

இளையராஜாவின் இசையில், “உன்னை நான் விரும்பினேன்” என்ற பாடல் உள்ளத்தைத் தொடுகிறது. பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

’மைலாஞ்சி’ – முக்கோண காதல் கதை; காதல் விரும்பிகளுக்குப் பிடிக்கும்!

ரேட்டிங்: 2.75/5.