“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும்; இல்லையெனில்…”: மாநில அமைச்சர் எச்சரிக்கை!

“மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார்.
தானேவின் பயந்தர் பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் இந்தியில் பேச மறுத்து வாக்குவாதம் செய்ததால், அவரை சிலர் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் சலசலப்பை உருவாக்கியது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை சேர்ந்த நபர்கள், அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நவ நிர்மான் சேனா கட்சியினர் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மராத்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல வகைகளில் முன்னெடுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து பேசிய மகாராஷ்டிர அமைச்சர் யோகேஷ் கதம், “மகாராஷ்டிராவில் உள்ளவர்கள் மராத்தி பேச வேண்டும். உங்களுக்கு மராத்தி தெரியாவிட்டால், என்னால் மராத்தி பேச முடியாது என்ற வகையில் உங்கள் அணுகுமுறை இருக்கக் கூடாது. மகாராஷ்டிராவில் யாராவது மராத்தியை அவமதித்தால், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், அந்த கடைக்காரரை அடித்தவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்திருக்கக் கூடாது. அவர்கள் போலீஸில் புகார் அளித்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்று அவர் கூறினார்.