நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தை வாழ்த்திய, பாராட்டிய பிரபல இயக்குநர்கள்!

நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்’ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.
எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமான மேடை. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது நடிகர் கார்த்தி, ‘இப்படம் ஹிட்’ என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்தத் திரைப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். இந்த அரங்கத்திற்கு உள்ளே வரும்போது ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரையும் பார்க்கும்போதே வெற்றி கூட்டணி என நம்பிக்கை வந்தது. அதனால் மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
தயாரிப்பாளர் குமார் தொடக்க காலத்தில் நான் இயக்குநர் சேரனிடம் உதவியாளராக பணியாற்றியபோது அவரிடம் உதவி மேலாளராக பணியாற்றியவர். அவருடனான பயணம் மறக்க முடியாது. அவர் இன்று ஒரு தயாரிப்பாளராக உயர்ந்திருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வருகை தாருங்கள் என சொன்னேன். இதை சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர், ஏற்கனவே நான் உங்களை ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என் உடன் பயணிக்கிறார்.
‘விலங்கு ‘என்றொரு வெப் சீரிசை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் திருச்சியில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும்போது, ‘இந்த முன்னோட்டத்தில் பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படங்களில் இருந்து சில காட்சிகள் இருக்கும்’ என்று சொன்னார். பரவாயில்லை, இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.
இந்த படத்தை பார்த்த திங்க் மியூசிக் சந்தோஷ் சூரிக்குப் பிறகு எனக்கும் போன் செய்து இந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியை விட மிக சிறப்பாக இருக்கிறது . நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். சந்தோஷின் கணிப்பில் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும்.
எனக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். அதைப் பார்த்த நம்பிக்கையில் தான் நானும் சொல்கிறேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
சூரியும், நானும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் தான் அறிமுகமானோம். அந்தப் படத்தின் போட்டோ சூட்டை சூரியையும் விமலையும் சேர்த்து வைத்து நடத்தினேன்.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் சிறுத்தை சிவா பேசுகையில், ” சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் திரைத்துறையில் பணியாற்றி இன்று மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். சில பேர் வெற்றி பெறும்போது மனதிற்குள் சந்தோசம் ஏற்படும். அந்த மகிழ்ச்சியுடன் தான் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்துவிட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை. இந்த ட்ரெய்லரை உருவாக்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியும் , வாழ்த்துக்களையும் சொல்கிறேன். மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சூரி சார், நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். உங்கள் உடன் இருப்பவர்கள் அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ” என்னுடைய சகோதரர் சூரி அவர்களுக்கு வணக்கம். இந்த திரைப்படத்தில் அவர் அழகாக இருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சூரியின் இந்த உயரம் அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதன் பின்னால் கடுமையாக உழைத்தார். சீம ராஜா படத்திற்காக சூரியிடம் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றார். ஆறு மாத காலமும் கஷ்டப்பட்டார். ஆனால் அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் ஆறே நிமிடத்தில் படமாக்கினோம். அன்று அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார். அப்போதே இவர் ஹீரோவாக உயர்வதற்கு தகுதியானவர் என நினைத்துக் கொண்டேன். விடுதலை படத்தில் நடித்தபோது அவருக்கு உடலெங்கும் தையல் இருந்தது. ஒவ்வொரு தையலிலும் அவருடைய வாழ்க்கை உயர்ந்தது. தற்போது மாமனாக நிற்கிறார் என்றால்.. அதற்குப் பின்னால் அவருடைய கடும் உழைப்பு இருக்கிறது. இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
தாய்மாமன் உறவு என்பது சாதாரணமானதல்ல. அப்பா அம்மாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பதுதான் தாய் மாமன். ஒவ்வொரு தாய் மாமனும் தன்னுடைய அக்கா குழந்தையையும், தங்கை குழந்தையையும் எதன் காரணமாகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
சமீபத்தில் நிறைய படங்களின் டிரைலர்களை பார்த்திருக்கிறோம். அதில் வெட்டு, குத்து அதிகமாக இருக்கும். ஆனால் மாமன் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் அற்புதமான குடும்ப கதையை சொல்லி இருக்கிறார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்தத் திரைப்படத்தில் கலகலப்பு, உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் குறிப்பிட்டது போல் இப்படத்தின் இடைவேளையில் ஏதோ விசயம் இருக்கிறது. அது படத்தை பற்றிய ஆவலை தூண்டுகிறது. அதற்காக காத்திருக்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநருக்கும், நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில், ”இது எங்களுடைய குடும்ப விழா. சூரி எங்கள் குடும்பத்தில் ஒருவர். இந்த விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் வெளியான முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பிறகு விலங்கு என்ற ஒரு வெப்சீரிஸை இயக்கி வெற்றி பெற வைத்து அதன் மூலமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக நான் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த இயக்குநரை வைத்து வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார்.
சூரி இந்த படத்தின் கதையை சொல்லும்போதும், பிரசாந்தின் இயக்கத்தை பற்றி சொல்லும்போதும் சந்தோஷமாக இருந்தது. அதனால் இயக்குநர் பிரசாந்திற்கும், தயாரிப்பாளர் குமாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரியண்ணன் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பத்து வருடமாக அவரை எனக்குத் தெரியும். காமெடியாக நடித்த பிறகு ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இது போல் இந்தியாவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை . இருந்தாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு சூரியின் பயணம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். விடுதலை- கொட்டுக்காளி -கருடன் – என பல பரிமாணங்களை காட்டி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் அவர் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும் ..தெளிவாக யோசிப்பவர் என்பதும் தெரியும். அவரிடம் இருக்கும் கதை அறிவு சிறப்பானது. அவரிடமிருந்து வெளியாகும் முதல் கதை மாமன். இன்னும் அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கிறது. அதை எப்போதாவது ஒன்று இரண்டு என்று வெளியிட்டால் அவர் இன்னும் உயரம் அடையலாம். அதே நேரத்தில் மற்றவர்களின் கதையிலும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ”இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், சூரிக்கும் எமோஷனலான தொடர்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டிலிருந்து வந்திருப்பது போன்ற உணர்வு தான். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்து நிறைய இரவுகள் அவருடன் செலவழித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என் மனதில் இவர் இவ்வளவு இயல்பானவராக இருக்கிறாரே எனத் தோன்றும். நான் சூரி உடன் பழக தொடங்கியபோது அவருடைய மோசமான காலகட்டம் அது. அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகாமல் போன காலகட்டம் அது.
இந்தப் படத்தில் சூரியின் ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி திரைத்துறையில் அவருடைய இலக்கை சீக்கிரம் எட்டி விடுவார் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் சுவாசிகா பற்றி சூரி என்னிடம், ‘இந்த பொண்ணு தமிழ் சினிமா இருக்கும் வரை நடிக்கும். அவ்வளவு திறமைசாலி. நடிப்பு பிசாசு’ என்றார்.
நிஜ மனிதர்களை நாம் கதாபாத்திரங்களாக மாற்றும்போது அதில் நடிகர்கள் சரியாக உணர்ந்து நடிக்கவில்லை என்றால்.. படப்பிடிப்பு தளத்தில் கடினமாக இருக்கும். நமக்குள் தங்கி வலியை ஏற்படுத்திய உறவுகளை கதாபாத்திரங்கள் ஆக்கி அதனை திரையில் வெளிப்படுத்தும்போது சரியாக இருக்க வேண்டும் என நினைப்போம். என்னைப் போன்ற படைப்பாளிகள் நினைப்பது என்னவென்றால், எங்களுடைய மனதில் இருக்கும் கதாபாத்திரங்களை நடிகர்கள் திரையில் துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒரு கதையில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய அனைத்து நட்சத்திரங்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவராக ராஜ்கிரண் இருக்கிறார்.
ராஜ் கிரணின் பாதிப்பு இல்லாமல் கிராமத்து படங்கள் இல்லை. இந்தத் திரைப்படமும் அவருடைய படங்களில் பாதிப்பிலிருந்து தான் உருவாகி இருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல என்னுடைய வாழை திரைப்படமும் உருவாகி இருக்கிறது. நாங்கள் அனைவரும் எப்போதும் ராஜ் கிரணுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹேஷாம் இனிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சூரி தனக்கான தேரை உருவாக்கி, அதில் அவரே அமர்ந்து, அவரே இழுத்துக்கொண்டு செல்கிறார். அதனால் அவரிடமிருந்து யாரும் தேரை பிடுங்க இயலாது. வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ” இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே வெற்றி பெறும் என சொல்ல முடிகிறது. மக்கள் அண்மை காலமாக லைட் ஹார்ட்டட் ஸ்கிரிப்ட்டுகளுக்கு கொடுக்கும் வரவேற்பு சந்தோசமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த மாமன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறும்.
சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது என சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அதுதான் சிறப்பு.
நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். இதில் பத்து கதைகள் வந்தால்… அதில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள். அதை பார்க்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர் , நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.