குதிரைவால் – விமர்சனம்

நடிப்பு: கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன் மற்றும் பலர்

இயக்கம்: மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்

தயாரிப்பு: ‘நீலம் புரொடக்சன்ஸ்’ பா.இரஞ்சித் & ’யாழி பிலிம்ஸ்’ விக்னேஷ் சுந்தரேசன்

ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துகுமார்

பின்னணி இசை: பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர்

பாடலிசை: பிரதீப் குமார்

படத்தின் நாயகன் கலையரசன்,  முதல் காட்சியிலேயே  ஒரு குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கிறார். குதிரைவால் முளைத்த காரணத்தைத் முதல் காட்சியிலிருந்து தேடி அலைகிறார் . தன் பெயரை மறந்து, தான் ஃபிராய்ட் என உணரும் கதாநாயகன் கனவுகளிலேயே தனக்கு வால் முளைத்த காரணமும் இருப்பதாக எண்ணி ஒரு குறிசொல்லும் பாட்டி, ஒரு ஜோசியர், ஒரு கணக்கு வாத்தியார் என வெவ்வேறு ஆட்களிடம் ஆலோசனை கேட்கிறார்.

மறந்துபோன கனவை ஞாபகப் படுத்தச் சொல்லும் பாட்டி, உலகத்துல இருக்கற எல்லா பிரச்சினைக்கும் கணக்குல தீர்வு இருக்கு என சொல்லும் கணக்கு வாத்தியார் என அனைவரும் படத்தின் அடுத்து அடுத்த காட்சிக்கு கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கின்றனர்.

0a1b

படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பல அடுக்குகளில் அழகியல் கொட்டிக் கிடக்கிறது. தற்கால சினிமா வகைமைகளில் புதிய வகைமையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் குதிரைவால் ஒரு முக்கியமான திரைப்படம்.

ஒற்றை கதை சொல்லல் தன்மையை விடுத்து படம் நெடுகிலும் பல்வேறு கிளைக்கதைகள் வால் போல முளைத்துக் கொண்டே இருந்தாலும் கவனிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

கதையில் வரும் கனவுத்தன்மை, கற்பனையில் உருவாகும் உலகம், காட்சிகளி்ன் படிமங்களின் இருக்கும் நுண் அரசியல் குறியீடுகள் என பல காரணிகள் முழுக்க நம் மூளையை ஆக்கிரமித்து பெரும் கவனத்தைக் கோருகிறது.

ஒரு காட்சியின் முழு சாரத்தை அறிந்துகொள்ள பலமுறை திரும்பப் பார்க்கத் தூண்டும் தன்மையுடையதாக இருந்தாலும் நம்முள் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே படத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 வால் முளைத்த பிறகு வாலின் அசைவுக்கு ஏற்றார் போல கலையரசன நடிப்பு சிறப்பு.

தமிழக அரசியலைப்போலவே எம்.ஜி.ஆர், படம் முழுதும் தவிர்க்க முடியாத வடிவாக வருகிறார்.

பெரும் தனி இலக்கியத்திற்கு உண்டான அனைத்து கூறுகளுடன் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் இராஜேஷ் .இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர் இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்.

குதிரைவாலின் காரணம் தேடிசெல்லும் பயணம் என்றென்றும் கலை உலகில் நிலைத்து நிற்கும்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது.

கலை இயக்குனர் ராமு தங்கராஜ் ஒவ்வொரு இடத்திலும் ஓவிய அழகை காட்சிகளில் அடுக்கி உள்ளார்.Non -Linear கதைசொல்லலில்  படத்தொகுப்பில் ஒரு புதிய வடிவத்தை அமைத்து பார்வையாளர்களுக்கு பெருங்கதையை எளிதாக்கி 2 மணிநேர  படமாக கொடுத்துள்ளார் எடிட்டர் கிரிதரன். பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு ஃப்ராய்டின் மனசிக்கல்களுக்கு ஏற்றவாறு கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஃப்ராய்டின் காதுகளில் கேட்கும் ஒலிகள் முதல் மலைகளில் கேட்கப்படும் பிரத்தியேக ஒலிகள் வரை அனைத்தும் அப்படியே உணர வைக்கிறார் அந்தோனி ரூபன்.

பாடகர் பிரதீப் குமார் இசையப்பாளராகவும் தமிழ் சினிமா உலகில் முக்கிய இடம் பிடிப்பார்.

குதிரைவால் – வரவேற்கத்தக்க பரிசோதனை முயற்சி!