கட்ஸ் – விமர்சனம்

நடிப்பு: ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், நான்ஸி, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ரங்கராஜ்

ஒளிப்பதிவு: மனோஜ்

படத்தொகுப்பு: ரஞ்சித்

இசை: ஜோஸ் ஃபிராங்ளின்

தயாரிப்பு: ஜெயபாரதி ரங்கராஜ்

வெளியீடு: விக்கி ஃபிலிம்ஸ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்ட கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் பெத்தனசாமி (ரங்கராஜ்). நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி கணவதியம்மாளுக்கு (ஸ்ருதி நாராயணன்) இரவில் பிரசவ வலி ஏற்பட, அவரை அவசர அவசரமாக தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைகிறார் பெத்தனசாமி. வழியில் ஆட்டோவை வழிமறிக்கும் சில மர்மநபர்கள் கத்தியால் பெத்தனசாமியை சரமாரியாக குத்துகிறார்கள். ரத்தம் வழிந்தோட உயிருக்குப் போராடும் நிலையிலும் பெத்தனசாமி தனது மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடி, அருகிலுள்ள மருத்துவச்சியின் வீட்டில் சேர்க்கிறார். அங்கே தனக்கு மகன் பிறந்திருப்பதைத் தெரிந்து கொண்டபின் பெத்தனசாமி இறந்துபோகிறார்.

கணவனை இழந்த கணவதியம்மாள் மீன் மார்க்கெட்டில் மீன் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். ஒருநாள் அவருக்கும், மாமூல் கேட்டு நச்சரித்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் கணவதியம்மாளை அடித்து கீழே தள்ளிவிடுகிறார் இன்ஸ்பெக்டர். இதனால் ஆவேசம் கொள்ளும் கணவதியம்மாள், அன்று இரவு, போலீஸ் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை செய்கிறார். அப்போது இன்ஸ்பெக்டருடன் இருந்த ஒருவரால் கணவதியம்மாளும் கொல்லப்படுகிறார்.

இப்படி அப்பா பெத்தனசாமியையும், அம்மா கணவதியம்மாளையும் இழந்து அநாதையான மகன் ரங்கராஜ் (ரங்கராஜ்), தனது தாயின் லட்சியப்படி நன்றாகப் படித்து, நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார். அவர் மனைவி அனு (நான்ஸி), ஒரு பெண் குழந்தை என குடும்பமாக மகிழ்ச்சியாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம அதிகாரியான ஒரு திருநங்கை கொல்லப்பட்ட வழக்கு அவரிடம் விசாரணைக்கு வருகிறது. இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் தீர விசாரித்து, கொலையாளியான கார்ப்பரேட் முக்கியப் புள்ளியை (அர்ஜுன் தேவ்) கைது செய்து லாக்கப்பில் அடைக்கிறார். ஆனால், லாக்கப்பில் அடைக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் அந்த கார்ப்பரேட் புள்ளி, அவரது மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுகிறார். அப்படி வெளியே வந்தவர், தன்னை கைது செய்ததற்கு பழி தீர்ப்பதற்காக இன்ஸ்பெக்டர் ரங்கராஜின் மனைவி அனுவை கொடூரமாக கொலை செய்கிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? தன் மனைவியைக் கொன்றது கார்ப்பரேட் புள்ளி தான் என்ற உண்மையை இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கண்டுபிடித்தாரா? அந்த கொலையாளிக்கு ரங்கராஜ் கொடுத்த தண்டனை என்ன? மேலும், கதையின் ஆரம்பத்தில் ரங்கராஜின் அப்பா பெத்தனசாமியைக் கொன்றது யார்? அந்த கொலையாளிக்கும் பெத்தனசாமிக்கும் என்ன பகை? அப்பாவைக் கொன்ற நபருக்கு ரங்கராஜ் வழங்கிய தண்டனை என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்ஷனுடன் விடை அளிக்கிறது ‘கட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அப்பா பெத்தனசாமி, மகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் ஆகிய இரு வேடங்களிலும் ரங்கராஜ் நடித்திருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். கிராமத்து நாயகன், போலீஸ் நாயகன் ஆகிய வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் பார்வையாளர்களுக்கு சிறப்பாக கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

அப்பா பெத்தனசாமியின் மனைவி கணவதியம்மாளாக ஸ்ருதி நாராயணன் நடித்திருக்கிறார். அச்சு அசலான கிராமத்துப் பெண்ணாகவே தோன்றி தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

மகன் ரங்கராஜின் மனைவி அனுவாக நான்ஸி நடித்திருக்கிறார். குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் மலையாளம் கலந்த தமிழ் பேசி கவனம் ஈர்க்கிறார்.

செயற்கை உர பெருவணிகராக மஞ்ச்ரேக்கர், அவரது மகனும் கார்ப்பரேட் புள்ளியுமாக அர்ஜுன் தேவ் ஆகிய இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

பெத்தனசாமியின் அம்மாவாக வரும் ஸ்ரீலேகா ராஜேந்திரன், ரங்கராஜின் தாய்மாமா பாண்டியனாக வரும் சாய் தீனா, சப்-இன்ஸ்பெக்டர் தாமஸாக வரும் பிர்லா போஸ், சீனியர் கான்ஸ்டபிள் கரீம் பாயாக வரும் டெல்லி கணேஷ், பெண் கான்ஸ்டபிள் மகாலட்சுமியாக வரும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அப்பா பெத்தனசாமி, மகன் ரங்கராஜ் ஆகிய இரு வேடங்களில் நடித்திருக்கும் ரங்கராஜே இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ‘COP STORY’ ஜானரிலான ஒரு போலீஸ் கதையை எடுத்துக்கொண்டு, அதில் பல திருப்பங்களோடு திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். நம் மண், நம் மக்கள், நம் விவசாயம் ஆகியவற்றோடு நமது பெருமைமிகு தமிழ் மொழியையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்ற ஆழமான கருத்தை காட்சிகளாகவும் வசனங்களாகவும் இப்படத்தில் வலிமையாக வைத்திருப்பதற்காகவும் இயக்குநரை பாராட்டலாம்.

ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம் பயணித்திருக்கிறது.

மனோஜின் ஒளிப்பதிவும், ரஞ்சித்தின் படத்தொகுப்பும் நேர்த்தியான மேக்கிங்குக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘கட்ஸ்’ – அதிரடி ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்டுக்காக பார்க்கலாம்; ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5.