இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி!

பாகிஸ்தானுடனான போர் சூழலில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தேசிய கொடியேந்தி அணிவகுத்துச் சென்று, இந்திய ராணுவத்துக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தினர்.

பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சென்னை, கடற்கரைச் சாலையில் ‘இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் பேரணி’ நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் பேரணிக்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளுக்காகப் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது. அதன்படி, 200 இடங்களில் அரேபியன் கூடாரங்கள், பெண்களுக்கான ஒப்பனை அறை உட்பட 16 இடங்களில் கழிப்பறை வசதிகள், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, 10 இடங்களில் மருத்துவ முகாம், 15 ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு மெரினா சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் அரசு ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்நிலையில், பிற்பகல் முதலே கடற்கரை காமராஜர் சாலையில் ராணுவ முன்னாள் இந்நாள் அதிகாரிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பிலானவர்களும் குவியத் தொடங்கினர்.

டிஜிபி அலுவலகம் அருகே வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய கொடியை ஏந்தியவாறு பேரணியை தொடங்கினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், கூட்டணி கட்சித் தலைவர்களான கி.வீரமணி, வைகோ, இரா.முத்தரசன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் உள்ளிட்ட அனைவரும் இந்திய ராணுவம் வெல்லட்டும் என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து, கட்சி அடையாளமின்றி பேரணியில் பங்கேற்றனர். காவல் துறையினரும் பதாகைகளை ஏந்தி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் தேசிய கொடியேந்தியபடி, இந்திய ராணுவம் வெல்லட்டும் என்று முழங்கியவாறு அணிவகுத்தனர்.

சுமார் 50 நிமிடத்தில் 3.7 கிமீ தொலைவை கடந்து போர் நினைவு சின்னம் அருகே முதல்வர் பேரணியை நிறைவு செய்தார். அங்கு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ அதிகாரிகளின் உருவப் படத்துக்கு முதல்வர் உள்ளிட்ட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் போர் நினைவுச் சின்ன வளாகத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் தமிழகம் அவர்களுக்கு என்றும் துணை நிற்கும் என்ற வாசகத்துடன் கூடிய தேசியக் கொடியை நினைவு சின்னமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வருக்கு ஆளுநர் நன்றி:

ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தியமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சமூக வலைதள பக்கத்தில், “பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ராணுவத்துடன் நமது 8 கோடி தமிழக மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மக்கள் பேரணியை நடத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. நமது ராணுவத்துடன் நமது நாடு ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

அமைதி நீடிக்கட்டும்:

பேரணி புகைப்படத்தை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில், “இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் பேரணியாகத் திரண்டது. போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்” என தெரிவித்துள்ளார்.