எதிர்ப்பு எதிரொலி: ‘வடசென்னை’ படத்தில் இருந்து அமீர் – ஆண்ட்ரியா முதலிரவு காட்சி நீககப்பட்டது!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களைக் கடந்து  ஓடிக்கொண்டிருக்கிறது.

வடசென்னை மக்களின், குறிப்பாக மீனவ மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், நடுக்கடலில் படகில் அமீருக்கும் ஆண்ட்ரியாவுக்கும் முதலிரவு நடப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இக்காட்சிக்கு மீனவர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

“படகுகளையும், கட்டுமரங்களையும் நாங்கள் புனிதமாகக் கருதுகிறோம். அதில் முதலிரவு நடப்பதாக காட்சி வைத்திருப்பது மீனவ சகோதர சகோதரிகளின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது. எனவே இக்காட்சியை நீக்க வேண்டும்” என்று மீனவ சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

“யாருடைய மனதையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல” என்று விளக்கம் அளித்த படக்குழுவினர், இக்கோரிக்கையை ஏற்று, தற்போது அந்த காட்சியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அமீர் – ஆண்ட்ரியா  நடித்துள்ள வேறு இரண்டு காட்சிகளை இணைத்துள்ளனர்.

அதுபோல், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் கெட்ட வார்த்தைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அவர் பேசும் சில வசனங்களும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.