“ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்தை அழித்து விடும்!” – இயக்குனர் பாண்டிராஜ்

மத்திய அரசு கொண்டு வர உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்தை அழித்துவிடும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பாண்டிராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் இங்கு ஒரு இயக்குனராக வரவில்லை. என்னுடைய சொந்த ஊர் புதுகோட்டை. அங்கு ஒரு பிரச்னை என்று வரும்போது அதற்காக நான் கண்டிப்பாக போராடுவேன்.

புதுகோட்டை மாவட்டம் வானம் பார்த்த கந்தக பூமி. இங்கு விவசாயம் செய்வது மிக சவாலான ஒன்று. அப்படிப்பட்ட விவசாயத்தை நம்பியிருக்கும் இடத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் முயற்சியாகவே இந்த திட்டம் கருதப்படுகிறது.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரை வீரியம் இருக்கும் என கூறப்படுகிறது. பிற்காலத்தில் நானே இங்கு வந்துதான் விவசாயம் செய்யவேண்டிய நிலை வரலாம். அதற்காகவே நான் இங்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக போராடி அதனை வென்றது போன்று ஹைட்ரோ கார்பன் திட்ட போராட்டத்தையும் வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு இயக்குனர் பாண்டிராஜ் கூறினார்.