டி என் ஏ – விமர்சனம்

நடிப்பு: அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணிய சிவா, கருணாகரன், போஸ் வெங்கட், பசங்க சிவகுமார் மற்றும் பலர்
இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்
ஒளிப்பதிவு: பார்த்திபன்
படத்தொகுப்பு: வி.ஜே.சாபு ஜோப்
பாடலிசை: சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ்
பின்னணி இசை: ஜிப்ரான் வைபோதா
தயாரிப்பு: ‘ஒலிம்பியா மூவிஸ்’ ஜெயந்தி அம்பேத்குமார், எஸ்.அம்பேத்குமார்
வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
’டி என் ஏ’ என்ற படத் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு, இது ‘மரபணு அறிவியல்’ சார்ந்த படமாக இருக்கும் என்று நினைத்து அஞ்ச வேண்டாம். நாயகி பெயர் திவ்யா. அதன் முதல் ஆங்கில எழுத்து ’டி’. நாயகனின் பெயர் ஆனந்த். அதன் முதல் ஆங்கில எழுத்து ‘ஏ’. இப்படியாக, ‘திவ்யா அண்ட் ஆனந்த்’ என்பதைத் தான் சுருக்கமாக, ஸ்டைலாக ‘டி என் ஏ’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கதைப்படி, காதல் தோல்வியைத் தாங்க முடியாமல் போதைக்கு அடிமையாகி, கல்வியாளர்கள் நிறைந்த தனது சொந்தக் குடும்பத்தாலேயே வெறுக்கப்பட்டு, கேவலமாக நடத்தப்படுகிறார் நாயகன் ஆனந்த் (அதர்வா முரளி). இன்னொரு பக்கம், ’பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர்’ என்ற மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, சொந்த அம்மாவாலேயே விமர்சிக்கப்படுகிறார் நாயகி திவ்யா (நிமிஷா சஜயன்).
போதைப் பழக்கத்திலிருந்து மீளும் ஆனந்துக்கும், மருத்துவ சிகிச்சையால் மனநலம் பெறும் திவ்யாவுக்கும் பெற்றோர்களின் முன்முயற்சியால் ‘ஏற்பாட்டுத் திருமணம்’ நடைபெறுகிறது. புதுமணத் தம்பதியரின் மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையின் அடையாளமாக கர்ப்பம் தரிக்கிறார் திவ்யா.
திவ்யா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, பிரசவத்திற்காக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. உடம்பில் தாயின் ரத்தம் படிந்த பச்சிளம் குழந்தையைத் தூக்கி திவ்யாவிடம் காட்டுகிறார் நர்ஸ். அரை மயக்கத்திலும் அதன் முகத்தை ஆசை தீரப் பார்த்து மகிழ்கிறார் திவ்யா. அதன்பின், சுத்தம் செய்து இன்குபேட்டரில் வைப்பதற்காக குழந்தையை நர்ஸ் தூக்கிச் செல்கிறார். சிறிது நேரம் கழித்து, தாய்ப்பால் கொடுப்பதற்காக குழந்தையை திவ்யாவிடம் கொடுக்கிறார் நர்ஸ். குழந்தையைக் கையில் வாங்கி, அதன் முகம் பார்க்கும் திவ்யா திடுக்கிடுகிறார். குழந்தை மாறி இருக்கிறது. “இது என் குழந்தை இல்லை” என்று கதறுகிறார் திவ்யா. அவரது கதறல் கேட்டு அங்கு வரும் சீனியர் மருத்துவர், மருத்துவமனை ஆவணங்களை சரி பார்த்து, அது திவ்யாவின் குழந்தை தான் என்று உறுதியாகச் சொல்லுகிறார். ஆனால் திவ்யாவோ அதை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடிக்கிறார். முதலில் மனைவியை சமாதானப்படுத்த முயலும் ஆனந்த், பின்னர் மனைவி சொல்வதில் உண்மை இருப்பதாக நம்பத் தொடங்குகிறார்.
தங்கள் குழந்தை எங்கே போனது? என்ன ஆனது? அதைக் கடத்தியவர்கள் யார்? எதற்காக தங்கள் குழந்தைக்குப் பதிலாக வேறொரு குழந்தையைக் கொடுக்கிறார்கள்? என்பன போன்ற மர்மமான கேள்விகளுக்கு விடை காண களத்தில் இறங்குகிறார் ஆனந்த். அவர் கண்டுபிடித்த திடுக்கிடும் உண்மைகள் என்ன? தங்களது குழந்தையை அவர் மீட்டாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது ‘டி என் ஏ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆனந்தாக அதர்வா முரளி நடித்திருக்கிறார். அவருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள அருமையான கதாபாத்திரம். இந்த நல்வாய்ப்பை கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். காதல் தோல்வி காரணமாக ‘மொடாக்குடியர்’ ஆகி, முரட்டுத்தனமாக சலம்புவதாகட்டும், பொறுப்புள்ள கணவராக நட ந்துகொள்வதாகட்டும், குழந்தையைப் பிரிந்து தவிக்கும் மனைவியைக் கட்டிக்கொண்டு அழும் காட்சி ஆகட்டும், பிரமாதமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகி திவ்யாவாக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். தனது பெரிய கண்களாலேயே பக்கம் பக்கமாக வசனங்கள் பேசக்கூடிய நடிப்பு ராட்சசி அவர். இந்த படத்தில் அட்டகாசமாக நடித்து, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிட்டார். குறிப்பாக, குழந்தையைப் பறிக்கொடுத்துவிட்டு அவர் பரிதவிக்கும் காட்சிகளிலும், கிளைமாக்ஸில் குழந்தையை அடையாளம் கண்டு, “ நம்ம பாப்பா…” என்று கத்தும் காட்சியிலும் கல்நெஞ்சையும் கரைத்து கண்கலங்கச் செய்துவிடுகிறார்.
நாயகனின் அப்பா சிவசுப்பிரமணியமாக வரும் சேத்தன், நாயகியின் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர், நாயகனின் நண்பர் வெங்கட்டாக வரும் ரமேஷ் திலக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமியாக வரும் பாலாஜி சக்திவேல், இன்ஸ்பெக்டராக வரும் செல்வராஜ், பெண் மருத்துவர் புனிதவதியாக வரும் ரித்விகா, வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா, குழ ந்தைகளைத் திருடும் மூதாட்டி உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன். குழந்தை கடத்தல் பிரச்சனையை வித்தியாசமான கோணத்திலும், உண்மைக்கு நெருக்கமாகவும் அணுகியிருக்கிறார். போலீஸ் விசாரணை, குழந்தை கடத்தல் நெட்வொர்க் போன்றவற்றை சுவாரஸ்யமாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார்.
இசையமைப்பாளர்கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரது பாடல்களும், ஜிப்ரானின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கின்றன.
பார்த்திபனின் நேர்த்தியான ஒளிப்பதிவு, இரவு நேரக் காட்சிகளிலும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் மாயாஜாலம் செய்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோப், காட்சிகளை வேகமாக நகர்த்த உறுதுணையாக இருந்துள்ளார்.
’டி என் ஏ’ – குழந்தை கடத்தலில் புதிய கோணம்; குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 3.25/5.