‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை இதுதான்…!

ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே.பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’. ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு – முகேஷ்.ஜி. படத்தொகுப்பு – பிரபாகர். பாடல்கள் – குட்டி ரேவதி, மோகன் ராஜன்.

‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதை பற்றி இயக்குனர் ஜெய் கூறுகையில், “வரது, ரத்னா, ரிச்சி, சேது ஆகிய நால்வரும் தேவராஜ் என்ற லோக்கல் தாதாவிடம் வேலை செய்கிறார்கள். வரது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும்போது, அவனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடக்கிறது. அதன்பிறகு நடக்கிற தொடர்ச்சியான சம்பவங்கள் வரதுவின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இதனால் அவன், தாதா தேவராஜை விட்டுப் பிரிய முடிவெடுக்கிறான்.

 சில சம்பவங்களால் வரது மற்றும் அவனது சகாக்கள் அனைவரும் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிற பழமைவாதியான ஜமீன்தார் மற்றும் ஜமீன்தாரின் அழகிய மனைவியிடம் தஞ்சம் அடைகிறார்கள். அஙகேயே சில நாட்கள் தற்காலிமாக தங்கி, பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து யோசிக்கிறார்கள். அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு பாதையைக் காண்பிக்கிறது.

இந்த நான்கு பேரும் பழையதை எல்லாம் மறந்துவிட்டு புத்தம் புதியவாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். ஆனால் இவர்களை எப்படியாவது பழி வாங்க வேண்டுமென்று தாதா தேவராஜ் தேடிக் கொண்டிருக்கிறான். வரது மற்றும் அவனது சகாக்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்களா? அவர்களை தேவராஜ் என்ன செய்தான்? என்பதே படத்தின் கதை” என்றார் இயக்குனர்.