அகிலேஷ் யாதவை கட்சியிலிருந்து நீக்கும் உத்தரவை வாபஸ் பெற்றார் முலாயம்சிங் யாதவ்!

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்வை சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கிப் பிறப்பித்திருந்த உத்தரவை, அவரது தந்தையும், கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதன் மூலம் அகிலேஷ் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒழுங்கீன நடவடிக்கைக்காக இருவரையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கி வெள்ளியன்று உத்தரவிட்டிருந்தார் முலாயம் சிங் யாதவ்.

இந்நிலையில் ஷிவ்பால் யாதவ் கூறும்போது, “முலாயம் உத்தரவின் பேரில் நீக்க நடவடிக்கை உடனடியாக வாபஸ் பெறப்பட்டது, நாம் மதச்சார்பு சக்திகளை எதிர்த்து முழுப் பெரும்பான்மை ஆட்சியமைக்கப் பாடுபடுவோம்” என்றார்.

நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அகிலேஷ் யாதவ், தந்தை முலாயம் சிங் யாதவ்வை லக்னோவில் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக சந்தித்தார். மேலும் கட்சியின் மூத்த அமைச்சர் அஸம் கானும் முலாயமிடம் கட்சியின் ஒற்றுமை வலுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

முன்னதாக கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் தனது உணர்ச்சி ததும்பும் பேச்சில் தந்தைக்குப் பரிசளிக்கும் வகையில் புதிய அரசை அமைப்போம் என்று பேசினார்.