பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்
மதுரையைச் சேர்ந்த தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் நேற்று (11-09-26) காலமானார். அவருக்கு வயது 90.
மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். மதுரை ஞானஒளிவு புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இனிய தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் நகைச்சுவையாக பேசுவதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார்.
சமூகத்திலும, ஒவ்வொருவரது வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை சுவாரசியமாக நடத்துவதில் வல்லவர். பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, கடல் கடந்தும் தமிழ் மொழியை வளர்த்தவர்.
பேச்சாற்றலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாலமன் பாப்பையா, சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2021-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
நெஞ்சு வலி காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள். நேரிலும் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அரசு மரியாதை:
மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இன்று (12-09-26) நடைபெறும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவலை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
