மொத ராத்திரி – விமர்சனம்
நடிப்பு: ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் மற்றும் பலர்
இயக்கம்: ராஜா கருப்பசாமி
ஒளிப்பதிவு: சுரேந்திரன் பரஞ்சோதி
படத்தொகுப்பு: அசோக் அர்ஜுனன்
இசை: பரத் சங்கர்
கலை இயக்கம்: ஏ.பாலுமகேந்திரா
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய் ரவி ஷங்கர், அனில் யெர்னேனி
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர்
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் நாயகன் மருது என்ற மருதநாயகம் (ரிஷிகாந்த்). காதல் தோல்வி காரணமாக திருமணமே வேண்டாம் என்ற முடிவில் துபாய்க்குச் சென்று, அங்கேயே இருந்து ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர். அவருக்கு எப்படியாவது ஒரு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைக்கும் அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் முத்துச்செல்வி (அனிஷ்மா அனில்குமார்) என்ற பெண்ணைப் பார்த்து, அவருடைய குடும்பத்தாருடன் திருமணம் பேசி, நிச்சயித்து நாள் குறித்துவிட்டு, “உன் சகோதரியின் மகனுக்கு காது குத்து. தாய்மாமன் என்ற முறையில் நீ அவசியம் கலந்துகொள்ள வேண்டும். கிளம்பி வா” என்று மருதுவுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். அதை மருது உண்மை என்று நம்பி சொந்த ஊருக்கு வந்து பார்த்தால், அன்றே அவருக்குத் திருமணம், அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்கிறார்கள்.
மருதுவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான முத்துச்செல்விக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. காரணம், கையிலும் பையிலும் காசில்லாத ஒரு காமெடி பீஸை (இயக்குநர் ராஜா கருப்பசாமி) அவர் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார். பெற்றோர்களின் அடக்குமுறை காரணமாக மருதுவை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கு அவர் சம்மதித்த போதிலும், கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன்பே கல்யாண வீட்டிலிருந்து காதலனுடன் தப்பிச் சென்று, ஊரைவிட்டே ஓடிவிட திட்டம் தீட்டி, அதை காதலனிடமும் சொல்லி சம்மதம் பெற்றிருக்கிறார். ஆனால், மோட்டார் சைக்கிள் மக்கர் பண்ணியதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் காதலன் வந்து சேர இயலாமல்போக, முத்துச்செல்வியின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார் மருது.

தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘முதல் ராத்திரி’ நிகழ்ச்சியில், மருதுவும் முத்துச்செல்வியும் படுக்கை அறையில்! எப்படி தொடங்குவது என்று மருது தயங்கிக் கொண்டிருக்கையில், பதட்டத்தில் இருக்கும் முத்துச்செல்வி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஒற்றை விரலைக் காட்டி எழுந்து பாத்ரூமுக்குள் போய் கதவை மூடிக்கொள்கிறார். வெகுநேரமாகியும் முத்துச்செல்வி வெளியே வராததால், பாத்ரூம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போகிறார் மருது. அங்கே உள்ள ஜன்னல் வழியே வெளியே தப்பிச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார் முத்துச்செல்வி. அதன்பிறகு தான் அவர் வேறொருவரைக் காதலிக்கிறார் என்ற விவரம் மருதுவுக்குத் தெரியவருகிறது.
முத்துச்செல்வியைத் திட்டிவிட்டுத் தன்னைத் தானே நொந்துகொள்ளும் மருது, “நானே உன்னை அழைத்துப்போய் உன் காதலனுடன் சேர்த்து வைக்கிறேன்” என்று சொல்லி, கல்யாண வீட்டில் படுத்துறங்கும் சொந்த பந்தங்கள் யாருக்கும் தெரியாமல், முத்துச்செல்வியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? முத்துச்செல்வியின் காதலனை மருது கண்டுபிடித்தாரா, இல்லையா? காதலனையும், காதலியையும் சேர்த்து வைத்தாரா, இல்லையா? கையில் காசு இல்லாத காதலன், முத்துச்செல்வியை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்து பின்வாங்கினாரா? படுக்கையறையில் மணமகனும், மணமகளும் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடையும் குடும்பத்தாரும், உறவினர்களும் செய்த குழப்பங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு கலகலப்பான காமெடியுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, மணமகன் மருது என்ற மருதநாயகமாக ரிஷிகாந்த் நடித்திருக்கிறார். காமெடியும், எமோஷனும் கலந்த தனது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி, திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.
நாயகியாக, மணமகள் முத்துச்செல்வியாக அனிஷ்மா அனில்குமார் நடித்திருக்கிறார். விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படத்துக்குப் பிறகு அனிஷ்மாவுக்கு இதில் அழுத்தமான கதாபாத்திரம். அக்கதாபாத்திரத்துக்கு அவர் தனது சிறந்த நடிப்பால் மேலும் அழுத்தம் சேர்த்து, ரசிக்க வைத்திருக்கிறார்.
அம்மன் கோயில் பூசாரியாக வரும் சேத்தன், நாயகியின் ’காமெடி பீஸ்’ காதலனாக வரும் இயக்குநர் ராஜா கருப்பசாமி, கல்யாண வீட்டு அலப்பறைக் கதாபாத்திரங்களாக வரும் ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்பசாமி. ‘முதலிரவு’ என்னும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, பார்வையாளர்களை அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரைக்கதைக்குள் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, கிராமத்து மனிதர்களின் இயல்பான பேச்சு, அவர்களது மனநிலை, குடும்பத்துக்குள் இருக்கும் சின்னச் சின்ன மோதல்கள் என அனைத்தையும் செயற்கைத்தனம் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், இயக்குநர் பாக்யராஜின் திரைக்கதை மற்றும் இயக்கும் திறமை இப்பட இயக்குநருக்கு சுலபமாகவே கைவரப்பெற்று, பார்வையாளர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது. பாராட்டுகள் இயக்குநர் ராஜா கருப்பசாமி!
இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளோடு பொருந்திப் பயணிக்கிறது.
சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவு கிராமத்து சூழலையும், கதையின் இயல்பான தன்மையையும் அழகாகப் பதிவு செய்துள்ளது.
‘மொத ராத்திரி’ – விரசமில்லாத, கலகலப்பான, பார்த்து மகிழத்தக்க குடும்பப் படம்!
ரேட்டிங்: 4/5
