’வதந்தி சீசன் 2 – மிஸ்ட்ரி ஆஃப் மணி’ (இணையத் தொடர்): விமர்சனம்

நடிப்பு: எம்.சசிகுமார், யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஆண்ட்ரூ லூயிஸ்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: புஷ்கர் – காயத்ரி

ஒளிப்பதிவு: சரவணன் ராமசாமி

படத்தொகுப்பு: ரிச்சர்டு கெவின்.ஏ

இசை: சைமன் கே கிங்

தயாரிப்பு: ’வால்வாட்சர் பிலிம்ஸ்’ எஸ் குஹாப்ரியா, எஸ் நந்தகுமார், கௌதம் செல்வராஜ்

ஓடிடி தளம்: அமேசான் பிரைம் வீடியோ

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

கடந்த 2022ஆம் ஆண்டு ’அமேசான் பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில், ஆண்ட்ரூ லூயிஸ் எழுத்து – இயக்கத்தில், புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ‘வதந்தி சீசன் 1 – வெலோனியின் கட்டுக்கதை’ என்ற இணையத் தொடர் வெளியாகி, பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி தந்த ஊக்கத்தில், அதே ’அமேசான் பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில், ஆண்ட்ரூ லூயிஸ் எழுத்து – இயக்கத்தில், புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பில், எம்.சசிகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் ‘வதந்தி சீசன் 2 – மிஸ்ட்ரி ஆஃப் மணி’ என்ற இணையத் தொடர் தற்போது வெளியாகியுள்ளது. ”சசிகுமார் முதன்முதலாக நடித்திருக்கும் இணையத் தொடர், அவரது கரியரிலேயே முதன்முதலாக போலீஸ் உடை அணிந்து நடித்திருக்கிறார்” என்பன போன்ற சிறப்புத் தன்மைகள் கொண்ட இந்த இணையத் தொடர் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு மதுரை மாவட்டத்தில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி எட்டுவழிச் சாலை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. ஒன்றிய அமைச்சர் கலந்து கொள்ளும் இதன் அடிக்கல் நாட்டு விழாவில் அடிக்கல் நாட்ட பள்ளம் தோண்டும்போது, எதிர்பாராதவிதமாக உள்ளே மனித எலும்புக்கூடு ஒன்று தென்படுகிறது. அரசு நிகழ்ச்சியின்போது இந்த எலும்புக்கூடு கிடைத்ததால், ஊடக வெளிச்சம் பெற்று பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.

அடையாளம் தெரியாத அந்த மர்ம எலும்புக்கூடு யாருடையது என்பதை புலனாய்வு செய்யும் பொறுப்பை, ஏற்கெனவே ‘தண்டனை இடமாற்றம்’ செய்யப்பட்டு வந்து சேர்ந்திருக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசாவிடம் (எம்.சசிகுமார்) ஒப்படைக்கிறார் பெண் போலீஸ் சூப்பிரண்டு ரத்திகா (அனகா).

எந்த தடயமும் இன்றி, ஒரு கை இல்லாமல், சிதைந்த நிலையில் உள்ள அந்த எலும்புக்கூட்டை மட்டும் வைத்து விசாரணையைத் தொடங்கும் சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா, அதே இடத்தில் இன்னுமொரு எலும்புக்கூட்டை கண்டுபிடிக்கிறார். இரண்டும் பெண்களின் எலும்புக்கூடுகள் என்பதும், அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் ராசா மூசாவின் விசாரணையின் முடிவில் ‘மொடக்கத்தான்’ மணி (யஷ்வந்த்) என்பவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. எனினும், இக்கொலைகளை மொடக்கத்தான் மணி செய்திருக்க மாட்டார் என்று நம்பும் மூசா ராசா, மிகுந்த சிரமங்களுக்கிடையில் அந்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்குகிறார்.

’மொடக்கத்தான்’ மணி யார்? அவரது பின்னணி என்ன? அக்கொலைகளை அவர் செய்தாரா, இல்லையா? அவர் இல்லை எனில் உண்மையான கொலையாளி யார்? அவரை சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘வதந்தி சீசன் 2 – மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் மீதிக்கதை.

இத்தொடரின் நாயகனாக, சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசாவாக எம்.சசிகுமார் நடித்திருக்கிறார். தாடி வைத்த சப்-இன்ஸ்பெக்டராக காக்கி உடையில் மிகவும் இயல்பாக தோற்றமளிக்கிறார். புலனாய்வு திரில்லருக்குப் பொருத்தமாக யதார்த்தமான நடிப்பை வழங்கி, தன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார்.

மதுரை மாவட்ட பெண் போலீஸ் சூப்பிரெண்டு ரத்திகாவாக அனகா நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்குப் பொருந்தியிருப்பதோடு, அக்கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்.

‘மொடக்கத்தான்’ மணி என்ற புதிரான கதாபாத்திரத்தில் யஷ்வந்த் நடித்திருக்கிறார். மாடு பிடிக்கும் ஆர்வம், நண்பர்களிடம் பேசும் பாங்கு, காதல் காட்சிகள் என ஒவ்வொரு அம்சத்திலும் அசலான மதுரை இளைஞரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி கவனம் ஈர்க்கிறார்.

’மொடக்கத்தான்’ மணியின் காதலி நிலாவதியாக நடித்திருக்கும் ரேவதி சர்மா, மணியின் தங்கை வெண்பாவாக நடித்துள்ள தீபிகா ஆனந்த், அவரது தோழி பூர்ணியாக நடித்துள்ள வர்ஷினி கார்மேகம், டிஎன்ஏ ஆய்வு மைய அதிகாரியாக நடித்துள்ள சேத்தன், சுகுமாரனாக நடித்துள்ள அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

நாயகனான சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசாவின் மனைவி சுமையாவாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.

’வதந்தி சீசன் 1’-ல் சப்-இன்ஸ்பெக்டர் ராமராக வந்த விவேக் பிரசன்னா இந்த ’சீசன் 2’-லும் அதே கதாபாத்திரம் ஏற்று கலகலப்பிற்கு உதவியுள்ளார்.

இந்த ’சீசன் 2’ஐயும் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ். முதல் சீசனில் கொலையாளியைத் தேடும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்திய ஆண்ட்ரூ லூயிஸ், இரண்டாம் சீசனில் தண்டனை பெற்றவரை நிரபராதி என நிரூபிக்கும் பயணத்தை அதே வேகத்தில் கொண்டு செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்தது என்ன? கொலையாளி யார்? என்ற கேள்விகளை எழுப்புகிறது. இரத்தக் காட்சிகள், ஆபாசம், கொடூரமான காட்சிகள் எதுவும் இல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய அமைதியான – ஆனால் சுவாரஸ்யமான – கிரைம் திரில்லராக இதை உருவாக்கிய இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுக்கு நமது பாராட்டுகள்!

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் சைமன் கே. கிங், படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்த இணையத் தொடரின் தரத்துக்கும், நேர்த்திக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.

‘வதந்தி சீசன் 2 – மிஸ்ட்ரி ஆஃப் மணி’: அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கத் தக்க சுவாரஸ்யமான இணையத் தொடர்!

ரேட்டிங்: 3.75/5