மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

நடிப்பு: செல்வராகவன், குஷி ரவி, ஆர்எஸ் சதீஷ், கௌசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்

ஒளிப்பதிவு: கே.ரவி வர்மா

படத்தொகுப்பு: தீபக் எஸ்

இசை: ஏ.கே.பிரியன்

தயாரிப்பு: விஜயா சதீஷ்

பத்திரிகை தொடர்பு: ரேகா

சிறையில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தூக்கு தண்டனை கைதியான ராகவனை (செல்வராகவன்) காப்பாற்ற முயற்சிக்கும் எம்எல்ஏ பார்த்திபன் (ஒய்.ஜி.மகேந்திரா), அவரது வாழ்க்கைக் கதையை பற்றி விசாரிப்பதாகவும், அவருக்கு ராகவன் தன் கதையைச் சொல்லத் தொடங்குவதாகவும் படம் ஆரம்பமாகிறது…

… சாலை வசதியில்லாத பொன்வயல் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த ராகவன், நுங்கு வியாபாரம் செய்கிறார். அவருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த செல்விக்கும் (குஷி ரவி) திருமணம் நடக்கிறது. தன் மனைவியை பொருளாதார ரீதியில் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் ராகவன், அங்கும் இங்கும் கடன் வாங்கி, நெடுஞ்சாலையோரம் ‘செல்வி தபா’ என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்றைத் தொடங்குகிறார். இவர்களது அன்பான தாம்பத்ய வாழ்க்கையின் அடையாளமாக செல்வியின் வயிற்றில் குழந்தை வளர்கிறது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, செல்வி திடீரென்று தற்கொலை செய்து இறந்துபோகிறார். அன்பான மனைவியைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் கதறி அழும் ராகவன், மனைவியின் இறப்புக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவிக்கிறார். உண்மையான காரணம் தெரிய வரும்போது ஆவேசமாக கையில் கத்தி எடுக்கிறார்.

பிறகு என்ன நடந்தது? ராகவனால் கொலை செய்யப்படும் மூன்று பேர் யார்? ஏன்? தூக்கு தண்டனையில் இருந்து ராகவன் தப்பித்தாரா, இல்லையா? அவரது ஊர்மக்களுக்கு அவர் எப்படி தெய்வமாகிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு ”ரத்தமும் சதையுமாக” விடை அளிக்கிறது ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் ராகவனாக இயக்குநர் செல்வராகவன் நடித்திருக்கிறார். படம் முழுக்க யதார்த்தமான தோற்றத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கும் மனைவிக்கும் இடையிலான நேசம் நெகிழ்ச்சி; பரவசம். பரம சாதுவான அவரது கதாபாத்திரம், மனைவியின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரிந்து கத்தியைத் தூக்கும்போது பார்வையாளர்களை நிமிரச் செய்கிறது.

ராகவனின் மனைவி செல்வியாக குஷி ரவி நடித்திருக்கிறார். கன்னட நடிகையான இவர் அழகாக இருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். பல தமிழ்ப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு விரைவில் இவரைத் தேடி வரும்.

ராகவனின் அக்கா மரகதமாக வரும் கௌசல்யா, அவரது கணவர் குமாரசாமியாக வரும் ஆர்.எஸ்.சதீஷ், எம்.எல்.ஏ பார்த்திபனாக வரும் ஒய்.ஜி.மகேந்திரா, அவரது உறவினர் இன்பராஜாக வரும் மைம் கோபி, சங்கராக வரும் சேலம் தீபக், சிறுமி அமுதாவாக வரும் லிர்த்திகா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் ஒரு குக்கிராம மக்களின் துயர வாழ்க்கையையும், கந்துவட்டிக் கொடுமையை எதிர்கொள்ளும் அப்பாவிப் பெண்களின் அவலநிலையையும் மிகவும் யதார்த்தமாக – அதே சமயம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, காட்சிகளில் உள்ள பழமையை நீக்கியிருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

கே.ரவிவர்மாவின் ஒளிப்பதிவு, ஏ.கே.பிரியனின் பின்னணி இசை, எஸ்.தீபக்கின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் கதை சொல்லலுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘மனிதன் தெய்வமாகலாம்’ – நாயகனுக்கும், நாயகிக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நேசத்துக்காகப் பார்த்து மகிழலாம்

ரேட்டிங்: 3/5.