மை லார்ட் – விமர்சனம்
நடிப்பு: சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார், வசுமித்ர, அருள் எழிலன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ராஜு முருகன்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
படத்தொகுப்பு: சத்யராஜ் நடராஜன்
இசை: ஷான் ரோல்டன்
பாடல் வரிகள்: யுகபாரதி, ராஜு முருகன், அத்திப்பட்டி கே மாரியப்பன், தினேஷ் ராஜேந்திரன்
கலை இயக்கம்: முனி பால்ராஜ்
சண்டை அமைப்பு: பி.சி ஸ்டண்ட்
தயாரிப்பு: ’ஒலிம்பியா மூவிஸ்’ ஜெயந்தி அம்பேத்குமார்
வழங்கல்: சூர்யா (2டி எண்டர்டெயின்மெண்ட்), அம்பேத்குமார்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
கடந்த ஆண்டு அதர்வா முரளி நடித்த ‘டிஎன்ஏ’ என்ற தரமான வெற்றிப்படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில், ‘அயோத்தி’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற சமீபத்திய தரமான வெற்றிப்படங்களில் நடித்துள்ள சசிகுமார் நடிப்பில் உருவாகி, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அம்பேத்குமார் எம்.எல்.ஏ வழங்கலில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மை லார்ட்’. இப்படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…

கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் முத்து சிற்பி (சசிகுமார்), தனது மனைவி சுசீலாவின் (சைத்ரா ஜே ஆச்சார்) மருத்துவ அறுவை சிகிச்சைக்காக ஒரு கந்துவட்டிக்காரரிடம் (வசுமித்ர) வட்டிக்குக் கடன் வாங்குகிறார். அந்த கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த இயலாததால், கந்துவட்டிக்காரர் நெருக்கடி கொடுக்கிறார். அவருக்கு பயந்து, தன் மனைவி சுசீலாவை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் திருப்பூர் சென்று கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார் முத்து சிற்பி. அவர்கள் மாயமானதால் கடுப்பாகும் கந்துவட்டிக்காரர், அப்போது நேர்ந்த தீப்பெட்டி தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தோர் பட்டியலில் முத்து சிற்பி, சுசீலா ஆகியோரின் பெயர்களையும் சேர்த்துவிட்டு, அவர்களின் மரணத்துக்கு அரசு கொடுக்கும் நிவாரண நிதியை தானே கைப்பற்றி வைத்துக் கொள்கிறார். இப்படியாக, முத்துசிற்பியும் சுசீலாவும் உயிரோடு இருந்தபோதும், அரசு ஆவணங்களின்படி அவர்கள் இறந்து போனவர்களாக ஆக்கப்பட்டு, அடையாளம் பறிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பெரும் செல்வந்தரும், செல்வாக்கான ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஜாதா மோகனின் (ஆஷா சரத்) இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்ததால், அவர் படுத்த படுக்கையாக, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றுவதற்காக அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக மாற்று சிறுநீரகம் வாங்க முயற்சி செய்கிறார்கள். அமைச்சரின் ரத்தம் அரிய வகையைச் சேர்ந்தது என்பதால், பொருத்தமான சிறுநீரகம் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இறுதியில், தற்செயலாக, முத்து சிற்பியின் சிறுநீரகம் அமைச்சருக்குப் பொருந்தும் என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
உயிருடன் இருந்தும் சட்டப்படி பிணமாக அறிவிக்கப்பட்ட ஒரு மனிதனை, அதிகாரம் எப்படித் தனது தேவைக்காகப் பயன்படுத்த முயல்கிறது? இழந்த அடையாளத்தை மீட்க ’மக்கள் குத்து’ என்ற பத்திரிகையின் பத்திரிகையாளர் (குரு சோமசுந்தரம்), வழக்கறிஞர் கோபி (கோபி நயினார்) ஆகியோரின் உதவியுடன் முத்து சிற்பி நடத்தும் சட்டப் போராட்டம் என்ன? அதன் முடிவு என்ன? என்பதை சமூகப் பொறுப்புடன் சொல்வதே ‘மை லார்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் முத்து சிற்பியாக சசிகுமார் நடித்திருக்கிறார். சாதாரண கூலித்தொழிலாளியாக, வள்ளலாரின் பக்தர் என்ற வகையில் நல்ல பண்புகள் கொண்டவராக, மனைவியை ஆத்மார்த்தமாக நேசிப்பவராக, அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுப்பவராக இயல்பாகவும், நிறைவாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது அடையாளத்தை இழந்து தவிக்கும்போதும், நீதிமன்றக் காட்சியில் தேம்பி அழும்போதும் பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறார்.
நாயகனின் மனைவி சுசீலாவாக சைத்ரா ஜே ஆச்சார் நடித்திருக்கிறார். கன்னடத்தில் பிரபல நடிகையாகத் திகழும் இவர் கோவில்பட்டி பெண்ணாக கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கனமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெறுகிறார்.
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஜாதா மோகனாக ஆஷா சரத் நடித்திருக்கிறார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதுபட்டு, படுத்த படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போதும் அதிகார ஆணவத்தையும், ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தும் எதிர்மறை கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார்.
‘மக்கள் குத்து’ பத்திரிகையின் பத்திரிகையாளராக வரும் குரு சோமசுந்தரம், வழக்கறிஞர் கோபியாக வரும் கோபி நயினார், நீதிபதியாக வரும் ஜெயப்பிரகாஷ், புரோக்கர் அருளாக வரும் அருள் எழிலன், கந்துவட்டிக்கார்ராக வரும் வசுமித்ர உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். சமீபநாட்களாக தமிழக செய்திகளில் அதிகம் அடிபடும் ‘சிறுநீரக விற்பனை’ என்ற பிரச்சனையை இப்படத்தின் கதைக்கருவாக கையில் எடுத்திருக்கிறார். முத்து சிற்பி என்ற எளிய மனிதனின் கதாபாத்திரம் மூலம் சமூக சீர்கேடுகளை நெற்றிப் பொட்டில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கிறார். எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு பெரிதும் கைகொடுத்திருப்பது படத்தின் வசனங்கள். ஒவ்வொன்றும் அதிகாரத்தை நோக்கி ஏவப்படும் கூர்மையான அம்புகளைப் போல அழுத்தமாக தைக்கின்றன. ‘ஜோக்கர்’ படத்துக்குப் பிறகு இதில் வசனங்கள் பெரிய ப்ளஸ் ஆக அமைந்துள்ளன. குறிப்பாக ‘அதிகாரத்துக்கு ஏழைகள் வெறும் நம்பர்தான்’, ‘என்ன தேடுறீங்க? நீதியையா?’ போன்ற வசனங்கள் அப்ளாஸ் ரகம். எனினும், திரைக்கதையில் பல இடங்களில் ஒருவித நாடகத்தனமும், செயற்கைத் தன்மையும், லாஜிக் மீறல்களும் விரவிக் கிடப்பது பெருங்குறை. கதைக்கருவை வளர்த்தெடுப்பது, கதாபாத்திரங்களை வடிவமைப்பது, காட்சிகளை நேர்த்தியாகப் படைப்பது போன்ற திரைக்கதை அமைப்புப் பணிகளில் கூடுதல் சிரத்தை எடுத்திருந்தால், இப்படம் மிகச் சிறந்த படைப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.
நீரவ் ஷாவின் சிறப்பான ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் தரமான இசையும் இப்படத்துக்கு பெரிய பலம்!
‘மை லார்ட்’ – சமூக அவலங்களை விளாசும் ’அரசியல் நையாண்டி’ படம்; பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3/5
