வித் லவ் – விமர்சனம்

நடிப்பு: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், சரவணன், ஹரிஷ்குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, ஆர்ஜே ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: மதன்

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு: சுரேஷ் குமார்

கலை: ராஜ் கமல்

இசை: ஷான் ரோல்டன்

பாடல் வரிகள்: மோகன் ராஜன், உமா தேவி, மதன்

நடன அமைப்பு: சந்தோஷ்

சண்டை அமைப்பு: பிசி ஸ்டண்ட்ஸ் (கார்த்திக்)

தயாரிப்பு: ’ஸீயோன் பிலிம்ஸ்’ சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘எம்ஆர்பி எண்டெர்டெயின்மெண்ட்’ மகேஷ் ராஜ் பசிலியான்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

கடந்த ஆண்டு சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை இயக்கியவரும், அப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தவருமான அபிஷன் ஜீவிந்த், நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் என்பதாலும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய மதன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதாலும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘குட் நைட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மகேஷ் ராஜ் பஸ்லியானும், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் என்பதாலும், ஏற்கெனவே டீசர், முன்னோட்டம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் என்பதாலும், ‘வித் லவ்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

காதல் அழிவதில்லை. அதிலும், பதின்ம வயதில் / பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக அரும்பிய முதல் காதல் உணர்வுகள், அவை நிகழ்த்திய சம்பவங்கள் என்றும் மறைவதில்லை. அவை பசுமரத்தாணி போல் ஆழப் பதிந்திருப்பவை. கால ஓட்டத்தில் அவை வெளிமனம் கடந்து ஆழ்மனதில் தங்கியிருக்குமேயொழிய, உயிருள்ள வரை ஒருக்காலும் அழிந்து போகாது. வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் ஞாபகங்களாய், விம்மல்களாய், உரையாடல்களாய் அவை பீறிட்டு வெளிக்கிளம்பும் வல்லமை படைத்தது. அப்படி வெளிக்கிளம்பும்போது அவை புத்தார்வத்தை ஏற்படுத்தி, எப்படி ஒரு புதுப் பயணத்துக்கு வழி வகுக்கிறது என்பதைச் சொல்வது தான் ‘வித் லவ்’ திரைப்படம்.

நாயகன் சத்யசீலன் என்ற சத்யா (அபிஷன் ஜீவந்த்) திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் அவருடைய அக்கா (ஆர்ஜே ஆனந்தி), தான் தேர்வு செய்துள்ள ஒரு பெண் பற்றி எந்த தகவலையும் சொல்லாமல், அப்பெண்ணை ஒரு பொதுவான காபி ஷாப்பில் சந்தித்துப் பேசுமாறு சத்யாவிடம் கண்டிப்புடன் கூறுகிறார். அக்காவின் தொணதொணப்பு பொறுக்காமல் வேண்டா வெறுப்பாகக் கிளம்பிப் போகிறார் சத்யா.

அக்கா சொன்னபடி, நாயகி மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) காபி ஷாப்பில் சந்திக்கிறார் சத்யா. இருவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டு சம்பிரதாயமாகப் பேசத் தொடங்குகிறார்கள். “உன்னை ஏற்கெனவே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு எனக்கு” என்று மோனிஷா சொல்ல, “எனக்கு அப்படியெல்லாம் இல்ல” என்று பட்டென்று பதில் சொல்கிறார் சத்யா. பின்னர் பேச்சு காதல் பக்கம் திரும்புகிறது. “இதுக்கு முந்தி நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?” என்று கேட்கிறார் மோனிஷா. சத்யா முதலில் தர்மசங்கடத்தில் தயங்கி, பின்னர் சமாளித்து, “திருச்சி எஸ்டிஏ மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிக்கும்போது லவ் பண்ணியிருக்கேன்” என்று கூறுகிறார். இதைக் கேட்டு துள்ளிக் குதிக்காத குறையாக வியக்கிறார் மோனிஷா. “திருச்சி எஸ்டிஏ மெட்ரிக் ஸ்கூலா? நானும் அங்கே தான் படிச்சேன். அதான் உன்னை ஏற்கெனவே பாத்த மாதிரி எனக்கு இருந்துருக்கு. சரி… அங்கே யாரை லவ் பண்ணே?” என்று கேட்கிறார். “என் கிளாஸ்மேட் அனிஷாவை (காவ்யா அனில்)” என்று சத்யா சொல்ல, “அனிஷா அக்காவையா? அவங்களை எனக்கு நல்லா தெரியும். அவங்க எனக்கு சீனியர்” என்று குதூகலிக்கும் மோனிஷா, “உன் காதல் கதையைச் சொல்லு, கேட்போம்’ என்கிறார்.

தன் வகுப்பில் படித்த முஸ்லிம் பெண்ணான அனிஷாவை ஒருதலையாகக் காதலித்தது, பயம் காரணமாக காதலை அனிஷாவிடம் சொல்ல முடியாமல் தவித்து தத்தளித்தது, பள்ளிப் படிப்பு முடியப்போகும் தறுவாயில், காதலை எப்படியாவது புரொபோஸ் செய்துவிட வேண்டும் என்று இறுதியாகவும் உறுதியாகவும் அனிஷாவை அணுகியது, ஆனால், தான் அனிஷாவைக் காதலிப்பது தெரிந்தும் தன் நெருங்கிய நண்பன் தனக்கு துரோகம் இழைக்கும் வகையில், தனக்குத் தெரியாமல் அனிஷாவுடன் காதலுறவில் இருப்பது தெரிந்து அதிர்ந்து மனமுடைந்து போனது என சத்யா தன் நிறைவேறாத முதல் ஒருதலைக் காதல் கதையை சொல்லி முடிக்கிறார்.

மோனிஷா, அதே பள்ளியில் படிக்கும்போது தனக்கும் ஒரு காதல் இருந்ததாகச் சொல்கிறார். தன் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனான பாலாஜி (சச்சின் நாச்சியப்பன்) மீது தான் காதல் வயப்பட்டது, அந்த காதலைச் சொல்ல பாலாஜியை நெருங்கும் போதெல்லாம், கூச்ச சுபாவியான பாலாஜி காத தூரம் ஓட்டம் பிடித்தது, இதனால் இறுதி வரை தன் காதலை தெரிவிக்க முடியாமலே போனது என்ற தன் ஒருதலைக் காதல் கதையை சொல்லி முடிக்கிறார் மோனிஷா.

இப்போது மோனிஷாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றுகிறது: “நாம் இருவரும் சேர்ந்து நம்முடைய முதல் காதலர்களான அனிஷா, பாலாஜியைத் தேடிச் சென்றால் என்ன?” என்று கேட்கிறார். “அது எப்படி சரியா வரும்?” என்று முதலில் தயங்கும் சத்யா, பிறகு சம்மதம் தெரிவிக்கிறார். உடனே முதல் காதலர்களைத் தேடி இருவரும் திருச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

இந்த தேடல் பயணத்தில் நடப்பது என்ன? சத்யாவும், மோனிஷாவும் தங்களது முதல் காதலர்களான அனிஷா மற்றும் பாலாஜியை சந்தித்தார்களா? அவர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தினார்களா? அவர்களது அந்த காதல் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? இறுதியில் யாரை யார் கரம் பிடித்தார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு ஹியூமராகவும், மனதுக்கு இதமாகவும் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘வித் லவ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் சத்யசீலன் என்ற சத்யாவாக அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு நம்ம வீட்டுப் பிள்ளை போல, பக்கத்து வீட்டுப் பையன் போல மிகவும் எளிமையாக இருப்பதால், அவரது கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் சுலபமாக தொடர்புபடுத்திக் கொண்டு கதைக்குள் விரைவில் நுழைய முடிகிறது. விடலைப் பருவ மாணவர் மற்றும் இளமைப் பருவ இளைஞர் ஆகிய இரு வேறு தோற்றங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். காதல், நகைச்சுவை, கோபம், சோகம் என அனைத்து உணர்ச்சிகளையும் தனது இயல்பான நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிக்க வைத்திருக்கிறார். எதிர்காலத்திலும் தனக்குப் பொருத்தமான கதை மற்றும் கதாபாத்திரத்தை கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நாயகனாக நிச்சயம் நீடித்திருக்கலாம்.

நாயகி மோனிஷாவாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். சற்று சிந்திக்கத் தெரிந்த பெண்ணாக அசத்தலாக நடித்திருக்கிறார். கதையை உரையாடல் மூலம் நகர்த்திச் செல்லும் அச்சாணி போன்ற முக்கியமான தனது கதாபாத்திர வடிவமைப்பை சரியாக உள்வாங்கி, அதற்குப் பொருத்தமான நடிப்பை, அலட்டல் இல்லாமல் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் நாயகனைக் கவர்ந்த மாணவி அனிஷாவாக காவ்யா அனில் நடித்திருக்கிறார். பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்ணாக முதலில் பள்ளி மாணவியாகவும், பின்னர் கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தை சுமக்கும் தாயாகவும் வந்து, அந்தந்த பருவத்துக்கு உரிய நடிப்பை அழகாக வெளிப்படுத்தி, கவனம் ஈர்க்கிறார்.

பள்ளிப் பருவத்தில் நாயகியின் மனம் கவர்ந்த மாணவன் பாலாஜியாக சச்சின் நாச்சியப்பன் நடித்திருக்கிறார். உள்ளுக்குள் காதல் இருந்தாலும், நாயகி நெருங்கி வந்தால் விழுந்தடித்து ஓடிவிடக் கூடிய சுவாரஸ்யமான கதாபாத்திரம். மிகையில்லாமல் யதார்த்தமாக நடித்து சிரிக்க வைத்திருக்கிறார்.

நாயகனின் மாணவத் தோழர்கள் தினேஷ், ஜாஃபர் ஆகியோராக வரும் ஹரிஷ்குமார் மற்றும் சித்தார்த், நாயகியின் மாணவத் தோழிகள் சந்தியா, விநோதினி ஆகியோராக வரும் சாச்சனா மற்றும் டிம்பிள் கண்ணா, பள்ளி ஆசிரியர் சாமிநாதனாக வரும் சரவணன், நாயகனின் அப்பாவாக வரும் தேனி முருகன், நாயகனின் அக்காவாக வரும் ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் தனித்துவமான தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மதன். பள்ளிப் பருவத்தில் வரும் முதல் காதலை மையமாகக் கொண்ட கதைகள் தமிழ் சினிமாவுக்குப் புதிது அல்ல. ‘அழகி’, ‘96’ என ஏகப்பட்ட வெற்றிப் படங்களை பட்டியலிட முடியும். அந்த வரிசையில் இந்த ‘வித் லவ்’ வெற்றிப் படத்தையும் சேர்க்கும் வகையில் இயக்குநர் மதன் சிறப்பாக எழுதி, நேர்த்தியாக காதலையும், நகைச்சுவையையும் கலந்து திரைக்கதை அமைத்து, சுவைபட சொல்லியிருக்கிறார். பார்வையாளர்கள் அனைவரும் படத்தின் ஏதோவொரு அம்சத்துடன் தங்களைத் தொடர்புபடுத்தி உணர்ந்து, மெய்மறந்து ரசிப்பார்கள் என்ற நிச்சயத்துடன் இப்படத்தை இயக்கியிருக்கும் மதன், தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓ.கே ரகம். ’நேருக்கு நேர்’ படத்தில் தேவா இசையில் உருவான “அவள் வருவாளா…” பாடலை, இப்படத்தில் மிகச் சரியான இடத்தில் பொருத்தமாக பயன்படுத்தி தூள் கிளப்பியிருக்கிறார். பின்னணி இசை, காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் வலிமை சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் காமிரா, காதல் ரசத்தை அழகியலோடு அள்ளிப் பருகத் தந்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சுரேஷ்குமாரின் படத்தொகுப்பு, சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிகள் நகர கைகொடுத்திருக்கிறது.

‘வித் லவ்’ – காதலர்தின உற்சாகக் கொண்டாட்டத்துக்கு உகந்த வெற்றிப்படம்! பார்த்து ரசியுங்கள்!

ரேட்டிங்: 4/5.