எம்.சசிகுமார் படத்துக்கு தலைப்பு ஆனது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனம்!

சிவாஜி கணேசன் நடித்த பிரபலமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் வரும் ஆங்கிலேய அதிகாரியான ‘ஜாக்சன் துரை’யின் பெயரை தலைப்பாக வைத்து சத்யராஜ் – சிபிராஜ் நடித்த பேய் படம் சில மாதங்களுக்குமுன் வெளியானது. அதுபோல, அதே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜி கணேசன் பேசிய “பலே வெள்ளையத் தேவா…” என்ற கம்பீரமான வசனத்தை தலைப்பாக வைத்து எம்.சசிகுமாரின் புதிய படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் எம்.சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, நாயகனாக நடித்த ‘கிடாரி’ படத்தை தொடர்ந்து, புதுமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இப்படத்தில், அவருடன் சங்கிலி முருகன், கோவை சரளா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரவி ஒளிப்பதிவு செய்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார்.

பெயரிடப்படாமலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் இப்படத்துக்கு “பலே’ வெள்ளையத் தேவா” என பெயரிடப்பட்டிருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 14ஆம் தேதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்கிறது படக்குழு.